போலீசுக்கே இந்த நிலைமையா? எஸ்.ஐ. வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

சீர்காழி அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன்(59). இவர் திருவெண்காடு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கலைவேந்தன்(27) என்பவர் இரவு கணேசன் வீட்டிற்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த மூன்று பெட்ரோல் குண்டை வீசியுள்ளார்.
இதில் பெட்ரோல் குண்டு வெடித்து வாசலில் அமர்ந்திருந்த கணேசன் படுகாயம் அடைந்தார். இதனை அறிந்த அருகில் இருந்தவர்கள் கணேசனை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். தொடர்ந்து கலைவேந்தனை அப்பகுதி மக்கள் பிடித்து திருவெண்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து திருவெண்காடு போலீசார் வழக்குபதிவு செய்து கலைவேந்தனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணையில் கணேசனின் மகளை கலை வேந்தன் ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கலைவேந்தன் நேற்றிரவு கணேசன் வீட்டிற்கு சென்று தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் குண்டை வீசியது தெரியவந்துள்ளது.