மெரினா கடற்கரையில் உள்ள கடைகளுக்கு ஆப்பு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மெரினா கடற்கரையில், உணவுபொருட்கள், பொம்மைகள், பேன்சி பொருட்கள் விற்கும் கடைகள் தவிர, வேறு எந்த கடைகளையும் அமைக்க அனுமதிக்க கூடாது என மாநகாரட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெரினா கடற்கரையில், கடைகளை முறைப்படுத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டிசம்பர் 22 ம் தேதி கடற்கரையை நேரில் ஆய்வு செய்தனர். இந்த வழக்கு, இன்று மீண்டும் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, உலகிலேயே இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினா கடற்கரையில் ஒரு பகுதி நீலக்கொடி சான்று பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இரண்டு பகுதிகளை நீலக்கொடி சான்று பகுதியாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இதுதவிர, தலைவர்களின் நினைவிடங்கள் அமைந்துள்ள பகுதியின் பின்புறமுள்ள பகுதியையும் நீலக்கொடி சான்று பெற்ற பகுதியாக அறிவிக்க நடவடிக்கை வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், நீலக்கொடி சான்று பெற்ற பகுதிகளாக அறிவிக்கப்படும் பகுதிகளில் எந்த கடைகளையும் அமைக்க கூடாது எனவும் , உழைப்பாளர் சிலையின் பின்புறம் அமைந்துள்ள நிரந்தர கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றை அகற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
உலகில் வேறு எந்த கடற்கரையிலும் இவ்வளவு கடைகள் இல்லை எனவும், சாலையில் இருந்து கடலின் அழகை ரசிக்க முடியாத அளவுக்கு கடைகள் மறைப்பதால், தற்போது 1,417 கடைகள் அமைப்பது என்ற திட்டத்தை மறு ஆய்வு செய்து, கடைகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். உணவு பொருட்கள், பொம்மை, பேன்சி பொருட்கள் விற்கும் கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். மற்ற கடைகள் தேவையில்லை எனக் கூறிய நீதிபதிகள், கடற்கரை மக்கள் ரசிக்கத் தானே தவிர, ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது எனவும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கடற்கரையை ரசிக்க கடைகள் இடையூறாக இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், குறிப்பிட்டனர். கடைகளின் எண்ணிக்கையை குறைத்து புதிய திட்டத்தை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 8 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
D.Rameshkumar
8122781228


