பதறவைக்கும் வீடியோ..கொக்கி கழன்றதால் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த சுற்றுலா பயணி..!

 
1

கர்நாடக மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற இளைஞர் ஒருவர், 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தண்டேலியில் உள்ள  தனியார் ரிசார்ட்டில் ஜிப்லைன் சவாரியின் போது பாதுகாப்புப் பூட்டு செயலிழந்ததால், கர்நாடகாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் சுமார் 40 அடி உயரத்தில்  இருந்து கீழே விழுந்தார். இவர் 24 வயதான விஜயபுராவைச் சேர்ந்த குபேர் சுர்பூர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.   ஜூலை 3 அன்று டாண்டேலியில் உள்ள ஸ்டெர்லிங் ரிவர் ரிசார்ட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஜிப்லைனில் சென்றுக் கொண்டிருக்கும்போதே, பாதுகாப்புக்காக இருக்கும் பூட்டு அறுந்து விழுந்ததில், இளைஞர் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் இளைஞர் குபேர் சுர்பூரின் கால்,கை என பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கீழே விழுந்த இளைஞரை உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வரருகிறது.

அவருக்கு பல அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது.  இது சம்பந்தமான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், இளைஞர் ஜிப்லைனில் சென்றுக் கொண்டிருந்தபோது, கயிறு அறுந்து கீழே விழும் காட்சிகள் பதிவாகி உள்ளது. காயம் அடைந்த இளைஞர் குடும்பத்தினர் கூற்றுப்படி, விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்த சுரபுரா அந்த ரிசார்ட்டில் ஜிப்லைன் சாகசத்தில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே இந்தச் சம்பவத்திற்குக் காரணம் என்று அவர்கள் குற்றம் சாட்டினர். மேலும், அவரது மருத்துவ சிகிச்சைக்கான செலவை ரிசார்ட் ஏற்கும் முதலில் உறுதியளித்ததாகவும், பின்னர், அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனவும் கூறினர்.  இந்த விபத்து குறித்து ரிசார்ட் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில், இந்த சம்பவத்தை ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து என்று விவரித்ததுடன், விபத்து நடந்த நேரத்தில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் நடைமுறையில் இருந்தன என கூறியது. இந்த சம்பவம் சுற்றுலா பயணிகளிடையே அதிர்ச்சியை யும், பீதியையும் ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் இணையத்தில் பரவலான கவலையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க, சாகச விளையாட்டு வசதிகளைக் கடுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், உபகரணங்களைத் தவறாமல் பராமரிக்க வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.