அதிர்ச்சி..! பட்டாசு வெடிவிபத்தில் 89 பேர் காயம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!

 
1 1
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: "மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்சென்னை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தீபாவளி பண்டிகை பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் மருத்துவ பயனாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்து, தீ விபத்து சிகிச்சை வார்டுகளில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப் பணியாளர்களுடன் தேநீர் அருந்தி, இனிப்புகள் வழங்கி கலந்துரையாடினார்.


பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தீ விபத்து சிகிச்சை வார்டு ஆய்வு - திமுக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு தமிழக முதல்வரின் வழிகாட்டுதலோடு, ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த களப் பணியாளர்களுடன் கலந்துரையாடி, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் சொல்லி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து செல்வது என்பது தொடர் வாடிக்கையாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறோம். தமிழக முதல்வர் ஒவ்வொரு தீபாவளி முன்பாகவும் பாதுகாப்பற்ற முறைகளில் பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வும், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அரசின் பல்வேறு துறைகளின் எடுத்துரைக்க வேண்டும் என்றும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.


அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் காவல்துறை, தீயணைப்புத் துறை, மாசுக்கட்டுப் பாட்டு வாரியம் போன்ற பல்வேறு துறைகள் இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. மக்கள் நல்வாழ்வுத் துறையைப் பொறுத்தவரை முதல்வரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், வட்டார அரசு மருத்துவமனைகளிலும் தீபாவளி அன்று சிறப்பு சிகிச்சை வார்டுகள் அனைத்து மருத்துவமனைகளிலும் தொடங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் 36ல் தலா 20 படுக்கைகள் வீதம் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான தீக்காய பிரிவு வார்டுகள் தொடங்கப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் கடந்த வாரம் இம்மருத்துவமனையில் 20 படுக்கை வசதிகளுடன் கூடிய வெண்டிலேட்டர் கருவியுடன் கூடிய வார்டுகள் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று தனித்தனி வார்டுகள் தொடங்கப்பட்டது. நேற்று முதல் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் தமிழ்நாடு ழுழுவதும் தொடங்கி பட்டாசு வெடித்ததினால் தமிழ்நாடு முழுவதும் சிகிச்சைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை 89 பேர், இதில் 41 பேர் சிகிச்சை பெற்று நலமுடன் இல்லம் திரும்பி இருக்கிறார்கள். 48 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த 48 பேரில் சிறிய அளவிலான அறுவை சிகிச்சை என்கின்ற வகையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் 8 பேர், மிகச் சிறிய அளவில் அறுவை சிகிச்சை என்கின்ற வகையில் 32 பேர், அந்த வகையில் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை யில் 6 குழந்தைகள் பாதிக்கப்பட்டு ஒரு மகளிர் சகோதரி ஒருவர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.