செந்தில் பாலாஜிக்கு மூளைநரம்பில் சிறு கட்டி என தகவல்

 
செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளைநரம்பில் சிறு கட்டி இருப்பது தெரியவந்துள்ளது.

 செந்தில் பாலாஜி

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல்  சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் பலன் கிடைக்காததால், அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். உடல் நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒரு மணி நேரம் பரிசோதனை மேற்கொண்ட பிறகு, நெஞ்சுவலி ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி, செந்தில்பாலாஜிக்கு
உயர் ரத்த அழுத்தம் இருப்பதும் தெரியவந்தது.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மூளைநரம்பில் சிறு கட்டி இருப்பதும், அதுவே அவருக்கு கடும் தலைவலி ஏற்பட காரணமாக இருந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கழுத்தின் பின்பகுதியில் வலி ஏற்படும் பகுதியில் சவ்வு பாதிப்பு கண்டறியப்பட்டிருப்பதும் எம்.ஆர்.ஐ பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இவை இரண்டுமே தீவிர பாதிப்புகள் இல்லை என்றும், மருந்துகளிலேயே குணப்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.