"அண்ணாமலை லண்டன் சென்ற போது இந்தியில் பேசினாரா, இங்கிலீஷில் பேசினாரா?"- செந்தில் பாலாஜி

மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை லண்டனில் படிப்பிற்காக சென்றபோது அங்கு இந்தி பேசினாரா அல்லது ஆங்கிலம் பேசினாரா? என்று மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பினார்.
கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் நகர திமுக சார்பில் மும்மொழி கொள்கை எதிர்ப்பு மற்றும் தமிழ்நாட்டில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் கரூர் மாவட்ட செயலாளர் மின்சார துறை அமைச்சர் மான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. குளித்தலை நகர செயலாளரும் எம்எல்ஏ வுமான மாணிக்கம் முன்னிலை வகித்து தமிழ்நாடு முதலமைச்சர் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு செயல்படுத்திய திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
அதனை தொடர்ந்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழ்நாட்டின் அரசியல் கோமாளி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மும்மொழி கொள்கையை ஆதரிக்கும் அவர் லண்டனுக்கு படிப்பிற்காக சென்றபோது ஹிந்தி பேசினாரா அல்லது ஆங்கிலம் பேசினாரா என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். அவர் காலையில் ஒரு பேச்சு, மதியம் ஒரு பேச்சு, இரவு ஒரு பேச்சு என்று பேசக்கூடியவர். தான் பேசிய பேச்சினை கூட அடுத்த நாள் மறந்து பேசக் கூடியவர். தமிழ்நாட்டு மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். ஆனால் தான் கூறிய திட்டம் ஒன்று அதை செயல்படுத்துவது ஒன்று என்று மாறி மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்து இந்திய நாட்டு மக்களை ஏமாற்றக்கூடிய கூட்டம் பிஜேபி அரசு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் பலவற்றினை காப்பி அடித்து இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அந்த திட்டத்தினை செயல்படுத்துவதாக கூறி மக்களிடம் வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. இந்தியா மட்டுமல்ல உலகத்திற்கே பல்வேறு திட்டங்களை எடுத்துக்காட்டாக செயல்படுத்தியவர் தமிழ்நாடு முதலமைச்சர்..” என்றார்.