செந்தில் பாலாஜி மீதான ஜாமின் மனு- உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

 
செந்தில்பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்ட  சென்னை உயர் நீதிமன்றம், அவர் மீதான வழக்கையும் முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

Highcourt

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு, சென்னை எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், ஆகஸ்ட் 28ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன.

இதையடுத்து, மேலும் அவரை நீதிமன்ற காவலில் வைத்திருக்க அவசியமில்லை எனவும், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரிக்க, முதன்மை அமர்வு நீதிமன்றமும், சிறப்பு நீதிமன்றமும் மறுத்த நிலையில், இதுசம்பந்தமாக விளக்கம் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

senthil balaji

இந்த மனு, நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சிறையில் செந்தில் பாலாஜி 3 முறை நிற்க முடியாமல் கீழே விழுந்து விட்டதாகவும், மற்றவர் துணை இல்லாமல் அவரால் நீண்ட நேரம் அமர்ந்தோ எழுந்து நிற்கவோ முடியாது என்பதால், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஜாமின் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்பது குறித்து மட்டுமே உத்தரவு பிறப்பிக்க முடியும் எனத் தெரிவித்த நீதிபதிகள், சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டப்படி மத்திய அரசால் முதன்மை அமர்வு நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றமாக அறிவிக்கப்பட்டுள்ளதால், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை, முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமாக அறிவித்த மாநில அரசின் அரசாணை மத்திய அரசு சட்டத்துக்கு மேலானது அல்ல எனத் தெரிவித்த உயர் நீதிமன்றம், வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியது தவறு என்பதால், வழக்கை மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.