வீட்டிலிருந்து புறப்பட்டார் செங்கோட்டையன்! மீண்டும் டெல்லி பயணம்

கோபியில் இருந்து ஈரோடு வழியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றார் கே.ஏ.செங்கோட்டையன்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மூத்த நிர்வாகிகளுடன் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு திரும்பினார். இதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் டெல்லி சென்று, உள்துறை அமைச்சர் அமித்ஷா,பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோரை சந்தித்தார். அவருடன் பாஜக எம்.எல்.ஏ.நயினார் நகேந்திரனும் உடன் சென்றார். தமிழக அரசியல் களம் பற்றி அண்ணாமலை பாஜக தலைமையிடம் கூறியதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனியாக டெல்லிக்கு சென்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்தார்.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நாளை மீண்டும் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக தகவல் பரவியது. இன்று மாலை வரை வீட்டில் இருந்த கே.ஏ.செங்கோட்டையன் சற்றுமுன் காரில் ஈரோட்டுக்கு புறப்பட்டு சென்றார். அங்கிருந்து ரயில் மூலமாக சென்னை செல்கிறார். சென்னையில் இருந்து டெல்லி செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிசாமி மறுக்கும் நிலையில், செங்கோட்டையனை முன்னிறுத்தி பாஜக காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.