“பிரதமர் நூறு முறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்”- செல்வப்பெருந்தகை
பிரதமர் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இங்கு இடம் இல்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்த பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், “நூறாண்டுகளுக்கு ஒரு முறை அபூர்வ தலைவர்கள் தோன்றுவார்கள். அப்படி தமிழ்நாட்டில் அபூர்வ தலைவராக மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட தலைவராக மீண்டும் முதல்வராக வருவார் என்ற பிரகடனத்தோடு தமிழ்நாடு மக்கள் முதல்வரின் பிறந்த நாளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். சர்ச்சையான பிரச்சினைகளை கையில் எடுப்பதும், மதக் கலவரம் ஏற்படுத்துவதும் அனைத்து மக்களும் அமைதியாக வாழ்வதை அனுமதிக்க முடியாது என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிற ஆர் எஸ் எஸ் பிஜேபியின் முகமாக பிரதமர் இருக்கிறார், பிரதமர் எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும் அதிமுகவிற்கும் பாஜகவிற்கும் இங்கு இடம் இல்லை.
பிரதமர் நூறுமுறை வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஒரு திருப்பரங்குன்றம் இல்லை ஆறுபடை முருகர் கோவிலுக்கு சென்றாலும் அந்த முருகப்பெருமானே மன்னிக்க மாட்டார். புதிய ஆட்சி வருவதற்கு இங்கு வாய்ப்பில்லை, தமிழ்நாடு என்பது தமிழ் மண் என்பது அவர்களுக்கு உகந்த மண்ணுமில்லை அவர்களுக்கு உகந்த இடமும் இல்லை, தமிழ்நாட்டு மக்களால் பலமுறை நிராகரிக்கப்பட்ட அதிமுக பாஜக கூட்டணி தற்பொழுது திமுக முகமூடியை அணிந்து கொண்டு வருகிறது. தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் தாரை வார்த்து விட்டார். எனவே தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும் மீண்டும் இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தமிழ்நாடு சுடுகாடு ஆக்கப்படும்.ஒருபோதும் தமிழ்நாட்டு மக்கள் அதிமுக வையும் பாஜகவையும் காலூன்ற அனுமதிக்க மாட்டார்கள்” என்றார்.

