STANDUP COMEDY என்ற பெயரில் நேரு குறித்து அவதூறு- பரத் பாலாஜி மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

 
 சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கனும் - செல்வப்பெருந்தகை

STANDUP COMEDY என்ற பெயரில் முன்னாள் பிரதமர் ஆசிய ஜோதி ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக, அவரின் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பரத் பாலாஜி என்பவர் பேசிய பேச்சை வன்மையாகவும், கடுமையாகவும் கண்டிக்கின்றேன். புகழ்பெற்ற தலைவர்களை பற்றி அவதூறாக பேசி விளம்பரம் தேடுவது வாடிக்கையாகி விட்டது என தமிழ்நாடு காங்கிரஸ்  கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக ஊடகங்களில் ‘ஸ்டாண்ட் அப் காமெடி” என்ற பெயரில், பரத் பாலாஜி என்பவர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் பாரத ரத்னா பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களை மிக மிக இழிவாக கீழ்த்தரமான முறையில் கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார். இந்தியாவின் பிரதமராக 17 ஆண்டுகாலம் பதவி வகித்து, நவஇந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்பட்டவரும், உலக நாடுகளில் உள்ள அனைத்து தலைவர்களாலும் போற்றி பாராட்டப்பட்ட பண்டித நேரு அவர்களை இத்தகைய முறையில் இழிவாக பேசுவதை எவரும் அனுமதிக்க முடியாது. இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

பண்டித நேரு அவர்களை தரம் தாழ்ந்த நரகல் நடையில் இழிவாக பேசிய பரத் பாலாஜியை காவல்துறையினர் கைது செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவின் மகத்தான மனிதராக கருதப்பட்ட பண்டித நேரு அவர்களை பழித்து பேசியவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய அவதூறு பேச்சுக்கள் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினரின் மனதை புண்படுத்தியதோடு, கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, இதுபோன்ற நாகரீகமற்ற பேச்சுக்கள் சமூக ஊடகங்களில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு காவல்துறையை சேர்ந்த சைபர் கிரைம் பிரிவினருக்கு இருப்பதை வலியுறுத்த விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.