ஓபிஎஸ் நாடகமாட வேண்டாம்- செல்லூர் ராஜூ
மதுரை பெத்தானியாபுரம் பகுதியில் புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, வீடு வீடாக விலைவாசி ஏற்றம் தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர்.ராஜு பரப்புரை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, “பத்து தோல்வி பழனிச்சாமி என்று தமிழக முதல்வர் விமர்சிக்கிறார். திமுக போல் தோல்வி கண்ட கட்சி கிடையாது. தொண்டர்களுக்கு கடிதம் எழுதி அதன் மூலம் கட்சியை வளர்த்தவர் கலைஞர் கருணாநிதி. கூட்டனி இல்லாமல் திமுக வெற்றி பெறவில்லை.மக்கள் செல்வாக்கு உள்ள யார் வேண்டுமானால் அரசியலுக்கு வரலாம். ஆனால், விஜய் அறையிலேயே உட்கார்ந்து கொண்டு அரசியல் செய்வது சரியா? கரூர் துயர சம்பவத்தில் பிறகு மக்கள் அதிகமாக கூடுவார்கள் காரணத்தை கூறி பொதுவெளிக்கு வராமல் இருப்பது தவறு. மாநில அரசு காவல்துறை ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால், மத்திய போலீஸ் வாங்கி பரப்புரைக்கு செல்லலாமே. உயிரிழந்தவர்கள் குடும்பத்தாரனை நேரில் சென்று சந்திக்காமல் அவர்களை சென்னைக்கு அழைத்து சந்தித்தது கொடுமையானது. பொது வாழ்க்கையில் இப்படியெல்லாம் ஒரு நடைமுறையை பார்த்ததே இல்லை.
கருணாநிதி ஜெயிக்க காரணமாக இருந்தவர் எம்.ஜி.ஆர். நடிகர் வரக்கூடாது என சொல்லவில்லை. ஆனால் களத்திற்கு சென்று மக்களை சந்தித்து மக்களின் அபிமானத்தை பெற வேண்டும். சகோதரர் விஜயை நாங்களாக திட்டவில்லை. எங்களை திட்டினார் நாங்கள் திட்டினோம். தற்போது தவெக வினர் பேசியதை வாபஸ் பெற்றுள்ளனர். அதேபோன்று நாங்களும் அவர்களை பற்றி பேச மாட்டோம். ஓ.பன்னீர்செல்வம் தன்னை கட்சியில் சேர்க்க வேண்டும் என்பதை கேட்பதற்கு ஒரு முறை இருக்கிறது. ஊடகம் வழியாக தான் கேட்க வேண்டுமா? ஓ.பன்னீர்செல்வம் நடத்தும் நாடகத்தை எல்லாம் மக்கள் பார்த்து சலித்து விட்டார்கள். இந்த நாடகமெல்லாம் வேண்டாம்” என்றார்


