காலாவதியான பொருட்கள் விற்பனை...பிரபல தியேட்டர் கேன்டீனில் அரங்கேறிய கொடுமை

 
ச்

செங்கல்பட்டு லதா திரையரங்க கேன்டீனில் காலாவதியான தின்பண்டங்கள் விற்றதால் திரையரங்க ஊழியர்களுடன் பார்வையாளர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள லதா திரையங்கம் கடந்த 25ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு கரூர் மாவட்டம் உப்படமங்களம் பகுதியை சேர்ந்த தீபன் (38) என்பவர் செங்கல்பட்டு மேட்டுத் தெரு பகுதியில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு வந்திருந்தார். அப்போது நேற்றிரவு இரவுக்காட்சி படம் பார்ப்பதற்காக செங்கல்பட்டு லதா திரையரங்கிற்கு குடும்பத்துடன் வந்து திரைப்படம் பார்த்து வந்துள்ளார். அப்போது இடைவேளையின் போது தீபன் தனது குடும்பத்தினருக்கு தியேட்டர் கேன்டீனிலிருந்து சமோசா, பாப்கார்ன் உள்ளிட்ட தின்பண்டங்களை ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார்.

தொடர்ந்து உணவு பொருட்களை சாப்பிடும்போது அனைத்து உணவு பொருட்களில் இருந்தும் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. அதனால் கெட்டுப்போன உணவு பொருட்களை சம்மந்தப்பட்ட கேன்டீனில் கொடுத்து அனைத்து பொருட்களும் காலாவதியாகி துர்நாற்றம் வீசி வருகிறது. உணவு பொருட்களுக்கான பணத்தை தீபன் திருப்பிக் கேட்டுள்ளார். அதற்கு திரையரங்க கேண்டின் ஊழியர்கள் அலட்சியமாக பதில் அளித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த தீபன் மற்றும் அவரது குடும்பத்தினர் திரையரங்க ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு நகர போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தீபன் மற்றும் அவரது குடும்பத்தினரை சமாதானம் செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பின் கலைந்து சென்றனர். இதனால் திரையரங்க வளாகத்தில் பரபரப்பு நிலவியது.