எம்எல்ஏ பதவியை துறந்து நாடாளுமன்ற தொகுதியில் நின்று வெற்றி பெற முடியுமா? வானதிக்கு சேகர்பாபு சவால்

 
அமைச்சர் சேகர்பாபு

வரும் நாடாளுமன்ற தேர்தலில் வானதி சீனிவாசன் தனது சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பை துறந்து சென்னையில் ஏதேனும் ஒரு நாடாளும்னற தொகுதியில் நின்று முடிந்தால் வெற்றி பெற்று காட்டட்டும் என அமைச்சர் சேகர்பாபு சவால் விடுத்துள்ளார்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வால் டாக்ஸ் சாலையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஒப்பனை அறையை அமைச்சர் சேகர்பாபு, எம்.பி. தயாநிதி மாறன், மேயர் பிரியா ஆகியோர் திறந்து வைத்தனர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “வரும் நாடாளுமன்ற தேர்தலில் வானதி சீனிவாசன் தனது சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பை துறந்து சென்னையில் ஏதேனும் ஒரு நாடாளும்னற தொகுதியில் நின்று முடிந்தால் வெற்றி பெற்று காட்டட்டும். இன்னும் திருமணமே முடியாமல் குழந்தைக்கு பெயர் வைப்பதா? கோயம்பேடு பேருந்து நிலைய இடத்தை எந்த பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் என்ற முடிவை கூட எடுக்காத நிலையில், துபாயில் உள்ள ஒரு ஷேக்கை மேற்கொள் காட்டி, கோயம்பேடு பேருந்து நிலைய இடத்தை தனியாருக்கு வழங்கவுள்ளதாக அன்புமணி கூறுவது விசித்திரமாக உள்ளது. இந்த ஆண்டில் அன்புமணி ராமதாஸின் கருத்துதான் தலைசிறந்த நகைச்சுவையாக இருக்கும்.

60 வயதை எட்டியவர்களை முருகனின்‌ அறுபடை வீடுகளுக்கு அழைத்துச்‌ செல்லும்‌ புதிய திட்டம்‌ இன்று தொடங்கப்பட்டுள்ளது. 207 பேர்‌ முருகனின்‌ அறுபடை வீடுகளுக்கு செல்கின்றனர்‌. அங்கு தனிநபராக செல்ல ரூ.50,000 வரை செலவாகும்‌. ஒரு நபருக்கு ரூ.15,830 அரசு செலவு செய்கிறது. இந்த பயணத்திற்கான செலவை அரசு மானியத்தில்‌ ஏற்றுக்கொண்டுள்ளது” என்றார்‌.