போராடும் தொழிலாளர்களை காவல்துறை மூலம் அடித்துவிரட்டும் கொடுங்கோன்மைதான் மக்களுக்கான மாற்றமா?- சீமான்
உரிமை கேட்டு போராடும் எம்ஆர்எஃப் (MRF) தொழிலாளர்களை காவல்துறை மூலம் அடித்துவிரட்டும் கொடுங்கோன்மைதான் மக்களுக்கான மாற்றமா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெரம்பலூரில் அமைந்துள்ள, எம்ஆர்எஃப் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் 730 தொழிலாளர்கள் ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளைக் கேட்டு கடந்த 27 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டு தொழிலாளர்களின் உழைப்பினை உறிஞ்சும் எம்ஆர்எஃப் நிறுவனம் அவர்களுக்கு உரிய ஊதியம் தர மறுத்து வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளியுள்ளது ஏற்க முடியாத பெருங்கொடுமையாகும். உரிமைக்காகப் போராடும் மண்ணின் மைந்தர்களான தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், எம்ஆர்எஃப் பெருநிறுவனத்திற்கு ஆதரவாக நின்று, காவல்துறை மூலம் தொழிலாளர்களைத் துன்புறுத்தி அடித்து, மிரட்டும் தவெக அரசின் கொடுங்கோன்மைச் செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.
தாராளமான நிலம், தடையற்ற மின்சாரம், வேண்டிய அளவு நீர், பல கோடி வரிச்சலுகை என்று வாரி வழங்கி பன்னாட்டு நிறுவனங்களைக் கூவி கூவி அழைத்து ஒப்பந்தம் போடும் தமிழ்நாடு அரசு, நம் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? நிரந்தரப் பணி, முறையான ஊதியம், உரியப் பணி நேரம் என்று இவற்றில் எது ஒன்றையும் பன்னாட்டு நிறுவனங்கள் தரமறுப்பது தமிழ்நாட்டு தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சி குருதியைக் குடிக்கும் கொத்தடிமை முறையில்லையா? தொழிலாளர் நலத்துறை மூலம் எம்ஆர்எஃப் பேச்சுவார்த்தை நடத்தி நம் தொழிலாளர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக்கொடுத்து, அவர்களின் நலன் காக்க வேண்டியது தமிழ்நாட்டு அரசின் தலையாயக் கடமையாகும். அதை விடுத்து, நாங்கள் மக்களை காக்க வந்த காவலர்கள், மாற்றத்தைத் தர வந்த மனிதப் புனிதர்கள் என்று தற்பெருமை பேசும் தவெக ஆட்சியாளர்கள் உரிமைக்காகப் போராடும் தொழிலாளர்களின் பக்கம் நிற்காமல், எம்ஆர்எஃப் நிறுவனத்தின் தொழிலாளர் விரோதப்போக்கிற்குத் துணைபோவது நம்முடைய தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும். ஆகவே, தமிழ்நாடு அரசு பெரம்பலூர் எம்ஆர்எஃப் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் கோரும் அறப்போராட்டத்தை அடக்கி ஒடுக்குவதைக் கைவிட்டு, கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவிக்க வேண்டும். அதோடு, தொழிலாளர் நலத்துறை மூலம் எம்ஆர்எஃப் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித்தர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

