நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோருக்கு ரத்ததானம் வழங்க தயார்- சீமான்

வயநாடு கனமழை மற்றும் நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், கூடலூர் தொகுதிக்கு மிகஅருகில் உள்ள எல்லைப்பகுதியான கேரளா மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள வைத்திரி, மேப்பாடி முன்டக்கை, சூரல்மலா போன்ற பகுதிகளில் இன்று (30-07-2024) அதிகாலை மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிர் இழந்து இருப்பதாகவும், 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலத்த காயம் ஏற்பட்டு மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இன்னும் பலர் நிலச்சரிவில் சிக்கி உள்ளதாகவும் செய்திகள் வருகிறது.
சிக்கி உள்ளவர்களை கேரளா மாநில அரசும், இந்திய ஒன்றிய அரசும் விரைந்து மீட்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கும், மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும் உரிய உதவிகள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும், நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவித்து தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கேரளா மாநில அரசுக்கு இந்திய ஒன்றிய அரசு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களுக்கு குருதி தேவைப்பட்டால் நாம் தமிழர் கட்சி - குருதிக்கொடை பாசறை மூலம் குருதி வழங்க தயாராக உள்ளோம். குருதி தேவைப்படின் கீழ்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளவும்!
மோகன்தாஸ் - 9344624697
கார்த்திக் - 9080126335
பழனி - 8903289969
தியாகராஜன் - 6382953434” எனக் குறிப்பிட்டுள்ளார்.