"அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுக" - சீமான் வலியுறுத்தல்!!

 
seeman

ஊதிய உயர்வு உள்ளிட்ட அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உயிர்காக்கும் உயர்ந்த சேவையாற்றும் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமானக் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவது மிகுந்த வேதனைக்குரியதாகும். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக உரிய ஊதியம் கேட்டுப் போராடிவரும் அரசு மருத்துவர்கள் வீதியில் இறங்கிப் போராடியும், அவர்களது அடிப்படை உரிமைகளை கூட நிறைவேற்றாமல் அலட்சியம் செய்யும் தமிழ்நாடு அரசின் எதேச்சதிகாரப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசு கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணை எண் 354/2009 படி, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை உயர்த்தவேண்டிய அரசு மருத்துவர்களுக்கான ஊதியத்தை, கடந்த பதினொரு ஆண்டுகாலமாக உயர்த்தப்படவில்லை என்பது சிறிதும் நியாயமற்றச் செயலாகும்.

seeman

கொரோனோ நோய்த்தடுப்பு நடவடிக்கைக்காகப் பல்லாயிரம் கோடிகளைச் செலவழிக்கும் தமிழ்நாடு அரசு, அரசு மருத்துவர்களுக்குச் சேரவேண்டிய நியாயமான ஊதிய உயர்வை மட்டும் வழங்க மறுப்பது ஏன்? இந்தியாவிலேயே சிறந்த மருத்துவர்கள் தமிழகத்தில்தான் உள்ளனர் என்று அரசு கூறும் நிலையில், மற்ற மாநிலங்கள் அளவுக்கு உரிய ஊதியத்தை அவர்களுக்கு வழங்க மறுப்பதேன்? சுகாதாரத்துறையில் 24வது இடத்தில் உள்ள பீகார் மாநில அரசு, தனது மருத்துவர்களுக்கு வழங்கும் ஊதியத்திற்கும் கீழாகவும், ஒன்றிய அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தைவிடக் குறைவானதாகவுமான ஊதியத்தையே அரசு மருத்துவர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்குவது ஏன்?கொரோனோ பெருந்தொற்றுக் காலத்தில் தமது உயிரையும் பொருட்படுத்தாது, மக்கள் உயிர்காக்க முன்கள வீரர்களாக முனைப்புடன் கடமையாற்றியவர்கள் அரசு மருத்துவர்கள். மற்ற மாநிலங்களைவிடத் தமிழகத்தில் கொரோனோ நோய்த்தொற்று பரவல் விரைந்து கட்டுக்குள்வர அரசு மருத்துவர்களின் அர்ப்பணிப்புமிக்க கடின உழைப்பே முதன்மையான காரணமாகும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும். இன்றளவும் பல வட மாநிலங்கள் கிராமப்புறங்களுக்கு மருத்துவச் சேவைகளைக் கொண்டு சேர்க்காத நிலையில், தமிழகக் கிராமங்களில் ஓரளவாவது மருத்துவச் சேவை கிடைக்க அரசு மருத்துவர்களின் தன்னலம் கருதாத சேவை மனப்பான்மையே முதற்காரணமாகும். தமிழகத்தில் உள்ள 18000 அரசு மருத்துவர்கள்தான் கோடிக்கணக்கான ஏழை, எளிய தமிழக மக்களின் நல்வாழ்விற்கு ஆணிவேராக உள்ளனர் என்றால் அது மிகையல்ல.

stalin seeman

தனியார் மருத்துவமனைகள் மருத்துவத்தை இலாபமீட்டும் தொழிலாக மாற்றியிருக்கும் இக்காலகட்டத்தில், பாமர மக்களின் உயிர்காக்கும் அரணாக அரசு மருத்துவர்களே உள்ளனர் என்பதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும். அத்தகைய போற்றுதற்குரிய பணியில் ஈடுபட்டு வரும் அரசு மருத்துவர்களுக்கு உரிய மதிப்பளித்து அங்கீகரிக்க வேண்டியது ஒரு நல்ல அரசாங்கத்தின் தலையாயக் கடமையாகும். அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டுமென்று உயர்நீதிமன்றம் பலமுறை வலியுறுத்திய பிறகும், அதற்காக அரசு மருத்துவர்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த பிறகும், உரிய ஊதியம் வழங்காமல் கடந்த அதிமுக அரசு இறுமாப்புடன் தட்டி கழித்தது. ஆட்சிக்கு வந்தால் அரசு மருத்துவர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்குவோம் என்று தேர்தல் நேரத்தில் வாக்குறுதியளித்து அதிகாரத்திற்கு வந்த திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையிலும், இதுவரை மருத்துவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்க்காமல் கண்டும் காணாமல் காலம் கடத்துவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. ஆகவே, மக்களின் உயிர்காக்கும் அரும்பணியில் தங்களை அர்ப்பணித்துள்ள அரசு மருத்துவர்களை, இனியும் உரிமைக்காகப் போராடி நிற்கும் நிலைக்குத் தள்ளாமல், அவர்களது அடிப்படை உரிமையான ஊதிய உயர்வு உள்ளிட்ட நீண்டகால நியாயமான கோரிக்கைகளை நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்றித்தர வேண்டுமென்று தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.