“விஜயலட்சுமி வழக்கில் நான் போதிய விளக்கம் அளித்தும் விளையாட்டை நிறுத்துவதாக தெரியவில்லை”- சீமான்

விஜயலட்சுமி வழக்கில் நான் போதிய விளக்கம் அளித்தும் விளையாட்டை நிறுத்துவதாக தெரியவில்லை, நேரம் கிடைக்கும்போது பதிலளிப்பேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டியளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் ஒசூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைப்பெற்றது. கூட்டத்தில் பங்கேற்கும் முன் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாங்கள் 2023ல் போராடினோம், திமுகவை நம்ப முடியாது, இந்தி எதிர்ப்பு கொள்கையில் நிலைப்பாடு இல்லாமல் உள்ளார்கள்.. மும்மொழி கொள்கை எதிர்ப்பு, தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பு, கல்வி நிதி வழங்காததை கண்டித்து நாங்கள் எழுச்சியுடன் தனியாக போராடுவோம். மத்திய அரசு ஒரே தேர்தல், ஒரே வரி, ஒரே ரேஷன், ஒரே கல்வி என்றால் ஒற்றுமை வளர்ச்சி வந்துவிடுமா என்பது வேடிக்கையாக உள்ளது. தேர்தலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள எத்தனையோ உள்ளன. மனித கழிவுகளை இயந்திரத்தில் அள்ளும் அமெரிக்கா, வாக்கினை சீட்டில் பதிவு செய்கிறார்கள். வாக்கு இயந்திரங்களை தயாரிக்கும் ஜப்பானும் வாக்குசீட்டில் தான் தேர்தலை சந்திக்கிறார்கள். வாக்கு இயந்திரம் பயன்படுத்தும் இந்தியா, நைஜிரியா இரண்டு நாடுகள் தான் ஊழலில் சிக்கி உள்ள மோசமான நாடுகள்.
மத்திய அரசில் பாஜக, காங்கிரஸ் என யார் இருந்தாலும் தமிழ்நாடு என்றால் வெறுப்பையே காட்டுகிறார்கள். வளங்கள், வரி மட்டும் வாங்கிக்கொண்டு உரிமையை கேட்டால் நிராகரிக்கிறார்கள். காவிரி பிரச்சனையில் காங்கிரஸ் தமிழகத்திற்கு ஆதரவாக பேசினால் பாஜக வெல்லும். பாஜக பேசினால் காங்கிரஸ் வெல்லும். மீனவர்களின் கைது பற்றி பேசாதவர்கள் வாக்கிற்காக வாசலில் நிற்பதையே விஜய் சிறுபிள்ளை சண்டை என்கிறார். நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் வளசரவாக்கம் போலீசார் கொடுத்த சம்மனுக்கு நான் ஆஜர் ஆகவில்லை. இதுக்குறித்து பலமுறை விளக்கம் அளித்துள்ளேன். இந்த விளையாட்டை அவர்கள் நிறுத்திக்கொள்வதாக தெரியவில்லை, நேரம் கிடைக்கும்போது நேரில் பதிலளிப்பேன்” என்றார்.