“லஞ்சம் இல்லா ஆட்சி மலர்ந்திட நாதகவை ஆதரித்து வெற்றி பெற செய்யுங்கள்”- சீமான்

 
ச்

திருத்தணியில் முருகனின் வேலாயுதத்தை நம்பி தான் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதாகவும், எங்களுக்கு  தோல்வியே கிடையாது என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில்  நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. இதனையடுத்து  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் தேர்தல் பிரச்சாரத்தை  வேல் பிடித்தவாறு  முருகன் பக்தி பாடல் பாடி தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.  திருத்தணி தொகுதியில் போட்டியிடும்  வேட்பாளர் சந்திரனை ஆதரித்து அவர் பேசினார். 

அப்போது பேசிய சீமான், “எல்லா கட்சிகளும்  கூட்டணிகள் அமைத்து தேர்தல் சந்திக்கின்றன. ஆனால் கடந்த  10 ஆண்டுகளாக தொடர்ந்து  தேர்தலை தனியாக சந்தித்து வருகிறோம்.. இத்தேர்தல்  காலம் நமக்கு தந்துள்ள பெரிய வாய்ப்பு. ஓட்டுக்கு பணம்  கொடுப்பதில் இருந்து தொடங்குகிறது லஞ்சம். அதனை எதிர்த்து தான் நாங்கள் போராடுகிறோம். நாங்கள்  அரசியலுக்கு வந்துள்ளது பிழைக்க அல்ல உழைக்க. பதவிக்காக அல்ல. உதவிக்காக. பெருமைக்காக அல்ல..எம் மண் பெருமைக்காக.. தேர்தலில் அரசியல் கட்சிகளின் சீட்டு பேரம்  எப்படியல்லாம் நடக்கிறது என்று  பார்த்திருப்பீர்கள்.  அப்படி என்றால்  36 லட்சம் வாக்கு வங்கி பெற்றுள்ள எங்களுக்கு எந்த அளவிற்கு நெருக்கடி இருக்கும். ஓட்டுக்கு பணம் தராமல்,  கொள்கைக்காக போராடும்  நா.த.க வை நம்பி நல்ல ஆட்சி வர வேண்டும் என்று மக்கள் விரும்புவதால் தான் தொடர்ந்து போராடும் சொந்த பிள்ளைகளை என் மக்கள் கைவிட மாட்டார்கள் என்று நம்பிதான் தேர்தலில் போட்டியிடுகிறோம்.  

இலவசங்கள், லஞ்சம், ஊழலை மாற்ற காலம் தந்துள்ள வாய்ப்பு தேர்தல். இலவசங்கள், லஞ்சம் இல்லா ஆட்சி மலர்ந்திட நாதகவை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும். சம வேலை,  சம உரிமைக்காக ஆசிரியர்கள் போராடி வருகிறார்கள், மாணவர்கள்போராடுகிறார்கள்.  உயிரை காக்க மருத்துவ பெருமக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள், தூய்மை பணியாளர்கள் போராடுகிறார்கள், செவிலியர்கள் போராடுகிறார்கள். அனைத்து போராட்டங்களிலும் நாம் தமிழர் கட்சி பங்கேற்றுள்ளது” என்றார்.