“வெடிகுண்டு வீசுவேன்” என பேசிய வழக்கு- 2 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத சீமான்

ஈரோட்டில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக நாம் தமிழர் கட்சி் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடரப்பட்ட வழக்கில் கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக இன்று ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில், விசாரணைக்கு வராத சீமான், தனது வழக்கறிஞர்கள் மூலம் மனு ஒன்றை வழங்கி உள்ளார்.
ஈரோட்டில் தேர்தல் பரப்புரையின் போது "வெடிகுண்டு வீசுவதாக" பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் பேசியதற்காக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மூன்று பிரிவுகளின் கீழ் கருங்கல்பாளையம் போலீசார் ஜனவரி 30.ம் தேதி வழக்குப்பதிவு செய்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட சீமான், கடந்த ஜனவரி 28.ம் தேதி பவானி சாலையில் நெரிக்கல் மேடு என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போது, தன்னிடம் பிரபாகரன் வழங்கிய வெடிகுண்டு இருப்பதாகவும் அதனை வீசினால், உங்களை புதைக்கும் இடத்தில் புல் பூண்டு கூட முளைக்காது, என பேசி இருந்தார் . மேலும் இனப்பற்று வேண்டாம், இனவெறி கொள்ளுங்கள் என்றும் கூறி இருந்தார்.
இந்த பேச்சு, வன்முறையை தூண்டும் வகையில் இருப்பதாகவும், இனம் மொழி அடிப்படையில் பிரிவினையை தூண்டும் வகையில் இருப்பதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக சீமான் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு சார்பில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் போலீசாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டதன் பேரில் ஜனவரி 30. ம் தேதி கருங்கல்பாளையம் போலீசார், சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பொது அமைதிக்கு எதிராக செயல்பட்டு, குற்றம் செய்யத் தூண்டும் வகையில் பேசுதல், மதம் இனம் மொழி அடிப்படையில் பிரிவினை வாதத்துடன் தவறான தகவல்களை உள்நோக்கத்துடன் பரப்புதல், தாக்குதல் நடத்துவதாக அச்சுறுத்தி வன்முறையை தூண்டுதல் என BNS-351(c), BNS-196, BNS-(1)(b)(1)(c)..பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக சீமான், ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் 20.ம் தேதி நேரில் ஆஜராகுமாறு கடந்த 17.ம் தேதி அவரது வீட்டிற்கு நேரில் சென்று போலீசார் சம்மன் வழங்கி இருந்தனர்.
இந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு சீமான் இன்று ஆஜராக வில்லை. அவருக்கு பதிலாக அவரது வழக்கறிஞர்கள் காவல் நிலையத்திற்கு வந்தனர். நாதக வழக்கறிஞர் நன்மாறன் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர், ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்திற்கு வந்து, வழக்கு விசாரணையை தள்ளி வைக்க கோரி காவல் ஆய்வாளரிடம் மனு அளித்தனர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் சீமான் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இவற்றை ஒருங்கிணைக்க கோரி டிஜிபி.யிடம் சீமான் சார்பில் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டிருப்பதாகவும், அதன் மீது டிஜிபி முடிவு எடுக்கும் வரை ஈரோடு கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும் என சீமான் தரப்பு வழக்கறிஞர்கள் கருங்கல்பாளையம் காவல் ஆய்வாளர் விஜயனிடம் கேட்டுக்கொண்டனர்.