பீகாரில் பாஜக வெற்றி பிறகு SIR தான் காரணம்- சீமான்

 
seeman seeman

பீகாரில் பாஜக கூட்டணி வெற்றி அடைந்ததற்கு எஸ்.ஐ.ஆர் தான் காரணம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  தெரிவித்துள்ளார்.

seeman

தஞ்சையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் நடைபெறும் தண்ணீர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்த சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “பீகாரில் நிதீஷ் குமார் அவர் பெயரை கெடுத்துக் கொள்ளவில்லை. எஸ் ஐ ஆர் மூலம் 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இன்னும் ஐந்து மாதங்கள் தமிழ்நாட்டில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் பீகார் தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்துமா? ஆக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தேர்தல் வியூக வகுப்பாளர்கள் கருத்து கூறுபவர்கள் தான் களப்பணியாளர்கள் அல்ல. காங்கிரஸ் தோல்வியடைவது எனக்கு மகிழ்ச்சி தான். தமிழ்நாட்டில் காமராஜர் மறைவுக்குப் பின்பு காங்கிரஸ் கட்சி அழிந்துவிட்டது, தற்போது இருப்பது ஒரு கம்பெனி தான்.

திராவிட கட்சிகளின் தோள்களில் ஏறிக்கொண்டு தான் காங்கிரசும் பாஜகவும் வசதியாக பயணம் செய்கின்றன. தமிழ்நாட்டில் காங்கிரஸ், பாஜகவிற்கு என்ன வேலை இருக்கிறது? தேசிய கட்சிகள் எந்த மாநிலத்திற்கும் தேவை இல்லை. பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றதற்கு எஸ் ஐ ஆரும் ஒரு காரணம்தான். திட்டமிட்டு எஸ் ஐ ஆர் மூலம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டிலும் வாக்காளர்கள் நீக்கப்படுவார்களா என்கிற அச்சம் உள்ளது. எஸ் ஐ ஆர் ஐ தங்களின் எஜமானர்களான பாஜகவினர் கொண்டு வந்ததால் அதை அதிமுகவினர் ஆதரிக்கிறார்கள். எஸ் ஐ ஆர் ஐ எதிர்ப்பதாக கூறும் திமுக சட்டசபையை கூட்டி அதை அறிவிக்க வேண்டும். பி.எல்.ஓக்களுக்கே படிவங்களை நிரப்ப தெரியவில்லை. பீகாரில் அதிக அளவு இஸ்லாமியர்கள் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது, அதே வேலையை பாஜக தமிழ்நாட்டிலும் செய்ய வாய்ப்புள்ளது. தேர்தல் ஆணையர்கள் பா.ஜ.க அரசால் நியமிக்கப்பட்டவர்கள். அதனால் தான் எஸ்.ஐ.ஆர் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு அவர்கள் வாய் திறப்பதில்லை” என்றார்.