முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி டானியாவிற்கு 2ஆம் கட்ட அறுவை சிகிச்சை

 
டான்யா

முகச்சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமி  டானியாவிற்கு முகம், வாய், தொண்டை குழாய், பகுதிகள்  இயல்பு நிலைக்கு திரும்ப  இரண்டாம் கட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. 

Thumbnail image

திருவள்ளூர் மாவட்டம் மோரை கிராமத்தை சேர்ந்த ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியின் 9 வயது மகளான டானியாவுக்கு மூன்றரைவயதில் முகத்தில் கரும்புள்ளி தோன்றியது. இதனை சாதாரண ரத்தக்கட்டு என்று சிகிச்சை பெற்ற நிலையில், பாதிப்பு குறையவில்லை. ஆறு ஆண்டுகளாக பல மருத்துவமனைகள் ஏறி இறங்கி சிகிச்சை பெற்றும் சிறுமியின் ஒருபக்க முகம் சிதையத் தொடங்கியது. இதைத்தொடர்ந்து  தமிழ்நாடு முதல்வரிடம்  சமூக வலைதளம் வாயிலாக  சிறுமி உதவி கோரியிருந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர் சா.மு.நாசர் மேற்பார்வையில், சிறுமி டான்யாவுக்கு தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு   கடந்த அகஸ்ட் மாதம் 23ம் தேதி இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது .இதில் சிறுமியின் முகம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. முதற்கட்ட அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவுற்றதை தொடர்ந்து, முதல்வர் நேரில் வந்து சந்தித்து சிறுமி டானியாவிற்கு ஆறுதல் கூறி இருந்தார்.
முகச்சிதைவு நோயிலிருந்து தன்னை காப்பற்றிய தமிழக முதலமைச்சருக்கு சிறுமி மற்றும் பெற்றோர் நன்றி தெரிவித்தனர். 

இந்த நிலையில் மருத்துவரின் பரிந்துரையின் படி சிறுமியின் முகம், வாய், தொண்டை குழாய், பகுதிகள்  இயல்பு நிலைக்கு திரும்ப  தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளவிருந்தது. அதன்படி சிறுமி கடந்த இரு தினங்களுக்கு முன்பு சவீதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை முன் அளிக்கப்படும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்த சிறுமியிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் செல்போன் வாயிலாக நலம் விசாரித்தார்.இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு முன் இன்று காலை தமிழக அமைச்சர் சா.மு. நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் சிறுமியிடம் நலம் விசாரித்து நம்பிக்கையூட்டினர். இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட  அறுவை சிகிச்சை இன்று தண்டலம்  சவீதா மருத்துவமனையில்  நடைபெற்றது.  11 மருத்துவர்கள் இந்த அறுவை சிகிச்சையை செய்து முடித்துள்ளனர்.

சுமார் இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த சிகிச்சையில் முகம், வாய், தொண்டை குழாய், பகுதிகள்  இயல்பு நிலைக்கு திரும்ப அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் சிறுமி நலமுடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.