சீமானுக்கு விலக்கு அளிக்க முடியாது- ஐகோர்ட் திட்டவட்டம்

 
s

கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு விலக்களிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம்  திட்டவட்டமாக மறுத்து விட்டது.

கடந்த 2019ம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்  நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தேச துரோகி என பேசி, வன்முறையை தூண்டியதாக கஞ்சனூர் காவல் நிலையத்தில் விக்ரவாண்டி  காங்கிரஸ் மாவட்ட தலைவர் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விக்கிரவாண்டி நீதிமன்றத்தில்  விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் விசாரணைக்கு வந்த போது, சீமானின் பேச்சு வன்முறையை தூண்டியது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என சீமான் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் சீமானுக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டது.

seeman

இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, பிடி வாரண்டை திரும்பப் பெறக் கோரி விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் எனவும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க முடியாது எனவும் கூறி, சீமானின் மனுவுக்கு பதிலளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 6ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.