கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, பாவூர்சத்திரம் ஆலங்குளம், சங்கரன்கோவில் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்தது. விடிய விடிய பெய்த மழை காரணமாக குற்றால அருவிகளில் நள்ளிரவு முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நள்ளிரவு ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக குற்றாலம் மெயின் அருவிக்கரையில் போலீசார் அமர்ந்து கண்காணிக்கும் கண்காணிப்பு கூண்டு சேதமடைந்தது. அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக மெயின் அருவி ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் பாதுகாப்பு கருதி மக்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (4.11.2023) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.