“போகிறவர்கள் போகட்டும். என் சொத்துக்களை பாதுகாக்க 8% வாக்குகள் போதும் என இபிஎஸ் சொல்கிறார்”- சவுக்கு சங்கர்
அரசியல் எதிர்காலம் வேண்டுவோர் இனியும் அதிமுகவில் தொடர்வதில் பொருளில்லை என்பதை உணர்ந்து கொண்டு முடிவுகளை எடுங்கள் என யூடியூபர் சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தளத்தில், “அரசியல் எதிர்காலம் வேண்டுமென்றால் அதிமுகவிலிருந்து வெளியேறுங்கள். சொந்த கட்சி. தன்னை முதலமைச்சராக, பொதுச்செயலராக்கி அழகு பார்த்த கட்சி. அந்த கட்சியின் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், சாரி சாரியாக மாற்றுக்கட்சிக்கு செல்கிறார்கள். அது குறித்து கிஞ்சித்தும் கவலையோ அக்கறையோ இல்லாமல் அவர்கள் அதிமுகவிலிருந்து வெளியேறுவதை மகிழ்ச்சியாக ரசிக்கும் ஒரே தலைவர் எடப்பாடி பழனிச்சாமியாகத்தான் இருப்பார். அவர் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தால், இந்த கட்சி கரைவதை அவர் விரும்புகிறார் என்றே புரிந்து கொள்ள் முடியும். அவருக்கு மிக நெருக்கமான தொழில் அதிபர் ஒருவர், எடப்பாடியிடம் ‘இப்படி வரிசையாக கட்சி நிர்வாகிகள் வெளியேறுகிறார்களே…. இதை தடுக்க ஏதாவது செய்யுங்கள் என்று சொன்னபோது, போகிறவர்கள் போகட்டும். என் சொத்துக்களை பாதுகாக்க 8 பர்சென்ட் வாக்குகள் போதும்’ என்று சொல்லியிருக்கிறார். வேறு ஒருவரிடம், யார் போனாலும் போகட்டும். வைகோ 20 வருசமா மதிமுகவை நடத்தலையா. இருக்கும் ஆட்களை வைத்து இருக்கும் கட்சியை நடத்திக் கொள்கிறேன்’ என்று கூறியிருக்கிறார்.
இதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் இன்றைய மனநிலை. அதிமுகவை மீண்டும் வலிமையாக்கி, தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற சிறு எண்ணம் கூட பழனிசாமியிடம் இல்லை. அவர் நடவடிக்கைகளை பார்த்தாலே உங்களுக்கு நான் சொல்வது உண்மை என்பது புரியும். வேறு யாரையும் தலைமை பதவிக்கு வரவிடாமல், ஆக்டோபஸ் போல கட்சியை ஆக்ரமித்து, அக்கட்சியை அழிக்கும் வரை பழனிச்சாமி ஓய மாட்டார். அரசியல் எதிர்காலம் வேண்டுவோர் இனியும் அதிமுகவில் தொடர்வதில் பொருளில்லை என்பதை உணர்ந்து கொண்டு முடிவுகளை எடுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

