“என் வீட்டில் ஊற்றப்பட்ட மலம் அல்ல, தமிழக அரசின் மீது ஊற்றப்பட்ட மலம்”- சவுக்கு சங்கர்

என் வீட்டில் ஊற்றப்பட்ட மலம் அல்ல, தமிழக அரசின் மீது ஊற்றப்பட்ட மலம் என ஊடகவியலாளர் சவுக்கு சங்கர் கூறியுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் வசித்து வருபவர் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர். யூடியூபில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில், இவருக்கு எதிராக சில வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, ஜாமின் பெற்று வெளியே வந்த இவர், தொடர்ந்து யூடியூபில் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோ பதிவிட்டுவருகிறார். தூய்மைப் பணியாளர்கள் குறித்து அவதூறாக பேசியதாகக் கூறி இவர் வீட்டின் மீது இன்று (மார்ச் 24) காலை தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுக்கு சங்கர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டார்.
Kevalamaana government pic.twitter.com/2lESl5zvH5
— Stand With Savukku (@Karthickrames1) March 24, 2025
இச்சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவரும் நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர், “இந்த ஆட்சி எப்படி நடந்து கொண்டிருக்கிறது என சொன்னனே... அதற்கு என் வீட்டில் நடந்த தாக்குதல் சம்பவமே சாட்சி. இது நான் சொன்ன குற்றச்சாட்டுக்கள் அத்துணைத்தும் உண்மை என சொல்கிறது. தமிழக முதல்வர் தயவு செய்து யோசித்து பாருங்கள். ஆயிரம் விமர்சனங்கள் வருகின்றன. விமர்சனங்கள் வருகின்றன என்பதற்காக ஒருவர் வீட்டின்மீது இப்படி அருவருக்கதக்க தாக்குதல் நடைபெறுகிறது என்றால் எத்தகைய ஆட்சியை அவர் நடத்துகிறார் என்பதை முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும். என் வீட்டில் ஊற்றப்பட்ட மலம் அல்ல, தமிழக அரசின் மீது ஊற்றப்பட்ட மலம். தமிழக அரசின் சட்டம் ஒழுங்கு மீது ஊற்றப்பட்ட மலம்” என்றார்.