சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு

நில அபகரிப்பு வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நில அபகரிப்பு தொடர்பாக தன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு பொய்யானது என தனது யூடியூப் சேனலில் யூடியூபர் சவுக்கு சங்கர் பேட்டியளித்திருந்தார். இதனையடுத்து தவறான தகவல்களை பரப்பியதாக நில அபகரிப்பு தடுப்பு பிரிவு காவல்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சவுக்கு சங்கருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சவுக்கு சங்கர் தொடர்ந்து தவறான தகவல்களை அளித்து வருவதாக காவல்துறை நீதிமன்றத்தில் தனது வாதத்தை முன் வைத்தது. பின்னர் நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி ஜி.ஆர்.சுவாமி நாதன் உத்தரவிட்டார். சமீபத்தில் அவரது ஜாமீன் மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.