ஆந்திராவிற்கும், தமிழகத்திற்கும் நல்ல நட்புறவு மேம்பட வாய்ப்பு- சசிகலா வாழ்த்து
ஆந்திராவில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கும், இந்த சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி, நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்கவுள்ள திரு.சந்திரபாபு நாயுடு அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என சசிகலா கூறியுள்ளார்.
ஆந்திராவில் உள்ள 175 தொகுதிகளை கொண்ட சட்டப்பேரவையில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சுமார் 160 தொகுதிகளை கைப்பற்றி முன்னிலை வகித்து வருகிறது தெலுங்கு தேசம் கட்சி, பாஜக , ஜனசேனா கூட்டணி. தெலுங்கு தேசம் 130 தொகுதிகளிலும், ஜனசேனா 20 தொகுதிகளிலும் , பாஜக ஏழு தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. அதே நேரம் ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி 24 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் மீண்டும் முதல்வர் அரியணையில் ஏறுகிறார் சந்திரபாபு நாயுடு. ஜூன் 9 தேதி சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல்வராக பதவியேற்கிறார்.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சசிகலா, “ஆந்திராவில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சிக்கும், இந்த சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்தி, நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்கவுள்ள திரு.சந்திரபாபு நாயுடு அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். திரு.சந்திரபாபு நாயுடு அவர்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்து இருந்தவர், எங்களுடன் எப்போதும் நல்ல நட்பு பாராட்டி வருபவர். வலிகள் நிறைந்த பல போராட்டங்களை கடந்து, மக்களின் மனங்களை வென்றுள்ள திரு.சந்திரபாபு நாயுடு அவர்கள் தலைமையில் ஆந்திராவில் அடுத்த ஆட்சி அமைய இருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இதன்மூலம் ஆந்திராவிற்கும், தமிழகத்திற்கும் நல்ல நட்புறவு மேம்பட வாய்ப்பு உள்ளது. அன்பு சகோதரர் திரு.சந்திரபாபு நாயுடு அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் தொடர்ந்து மக்களுக்கு பல்லாண்டு காலம் சேவையாற்றிட வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.