பொன்முடியின் பேச்சு அநாகரீகத்தின் உச்சம்- சசிகலா

கட்சியில் ஒரு உறுப்பினராக இருக்கக்கூட தகுதியில்லாத பொன்முடி இன்னும் அமைச்சர் பதவியில் நீடித்துக்கொண்டு இருக்கிறார் என சசிகலா சாடியுள்ளார்.
இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக அமைச்சர் பொன்முடியின் பேச்சு அநாகரீகத்தின் உச்சம். ஒரு பொதுமேடையில் இந்த அளவுக்கு பெண்களைப் பற்றி கொச்சையாக பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஒரு பொறுப்பு வாய்ந்த பதவியில் அமர்ந்துகொண்டு பெண்களை மிகவும் மோசமாக, இழிவு படுத்தி பேச எப்படி முடிகிறது என்று தெரியவில்லை. கடந்த 6ஆம் தேதி பொதுமேடையில் அமைச்சர் பொன்முடி பேசியதை, இன்றுவரை எந்த பத்திரிகை மற்றும் ஊடகங்களிலும் வெளிவராமல் திமுக தலைமையிலான அரசு அதிகாரத்தை பயன்படுத்தி பார்த்துக்கொண்டது இன்றைக்கு வெட்டவெளிச்சமாகிவிட்டது. ஒரு அமைச்சர் பதவியில் இருப்பவர் இந்த அளவுக்கு கீழ்த்தரமாக பேசிபின், 5 நாட்கள் கழித்து இன்றைக்கு கட்சி பதவியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுப்பது திமுகவினரின் கண் துடைப்பு நாடகமே தவிர வேறொன்றும் இல்லை. மேலும், கட்சியில் ஒரு உறுப்பினராக இருக்கக்கூட தகுதியில்லாத இவர் இன்னும் அமைச்சர் பதவியில் நீடித்துக்கொண்டு இருக்கிறார். தமிழக அமைச்சராக நீடிக்க இவருக்கு எந்தவித அருகதையும் இல்லை. பொன்முடி அவர்களை உடனே அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். ஒரு அமைச்சர் பதவியில் இருப்பவரே நாட்டின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதுபோல் பேசியிருப்பதால் இவர் அமைச்சராக பதவி ஏற்கும்போது தான் ஏற்றுக்கொண்ட ரகசியகாப்பு பிரமானத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளார். இவர் மீது மாண்புமிகு உயர்நீதிமன்றம் தாமாகவே முன்வந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
புரட்சித்தலைவி அம்மா அவர்களது அமைச்சரவையில் யாராவது இது போன்று நடந்து கொண்டார்களா? அவ்வாறு ஒருவர் பேசி இருந்தால் அவர் மேடையிலிருந்து கீழே இறங்குவதற்குள் அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவது மட்டுமல்ல, அவரை கட்சியிலிருந்தே வெளியேற்றி இருப்பார்கள். புரட்சித்தலைவி அம்மா ஆட்சியில்தான் பெண்கள் கண்ணியமாக வாழ முடிந்தது. ஆனால், இன்றைக்கு தமிழகத்தில் ஒவ்வொரு மணித்துளியிலும் பெண்கள் வஞ்சிக்கப்பட்டு பாதிக்கப்படுகிறார்கள். திமுக ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு மிகவும் கேள்விக்குறியாகிவிட்டது. இதற்கெல்லாம் ஆட்சி மாற்றம் ஒன்றே நிரந்தர தீர்வு என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.