இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஒரு வழக்கமான நிதிநிலை அறிக்கை - சசிகலா கருத்து

 
sasikala

மத்திய அரசின் 2024-2025ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை ஒரு வழக்கமான நிதிநிலை அறிக்கையாகத்தான் பார்க்க முடிகிறது என சசிகலா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள 2024-2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அம்சங்களை பார்க்கும் போது ஒரு வழக்கமான அறிக்கையாகத்தான் பார்க்கமுடிகிறது. அதே சமயத்தில் மக்கள் மிகவும் எதிர்பார்த்து இருந்த, ஒரு சில அறிவிப்புகள் இடம்பெறாமல் போனதும் துரதிருஷ்டவசமானது. அதாவது, விவசாயிகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், அவர்களின் சில இன்றியமையாத தேவைகள் இன்னமும் பூர்த்தியடையாமல் இருப்பதையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். 11.8 கோடி விவசாயிகளுக்கு வங்கிக் கணக்குகளில் நேரடியாக மானியம் செலுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி மகிழ்ச்சியை அளித்தாலும் விவசாயிகள் எதிர்பார்த்து இருந்த நதிநீர் இணைப்பு, விவசாய கடன் தள்ளுபடி, நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்துவது சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் இந்த இடைக்கால அறிக்கையில் இடம்பெறாமல் போய்விட்டது.

sasikala

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் 3ல் ஒரு பங்கு இடங்கள் மகளிருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதையும், பத்து ஆண்டுகளில் 30கோடி பெண்களுக்கு தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளதையும் எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். ஆயுஷ்மான் காப்பீடு திட்டம் அங்கன்வாடி ஊழியர்கள், தூய்மை பணியாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும், 9 முதல் 14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் பணிபுரியும் தாய்மார்களுக்கு அதிக ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்குவது குறித்தும், பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு அறிவிப்புகள் ஏதும் இடம்பெறாமல் போய்விட்டது. சூரிய மின் திட்டத்தின் மூலம் 1 கோடி வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும்,மத்திய அரசின் திட்டத்தின் கீழ் தற்போது வரை சுமார் 3 கோடி வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி இலவச வீடுகள் கட்டித் தரப்படும் என்ற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.


78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மேலும்,தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக ₹1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படுவது, இளைஞர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கக்கூடும். வருமான வரி விதிப்பில் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நடைமுறை தொடரும் என்று அறிவித்ததன் மூலம், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்த்தகூடும் என்று எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை  அளித்துள்ளது. எனவே, மொத்தத்தில் மத்திய அரசின் 2024-2025ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை ஒரு வழக்கமான நிதிநிலை அறிக்கையாகத்தான் பார்க்கமுடிகிறது என குறிப்பிட்டுள்ளார்.