பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சசிகலா வாழ்த்து!!

 
sasikala

12-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுதேர்வுகளில், தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், 12-ஆம் வகுப்பு பொதுதேர்வில் திருப்பூர் மாவட்டம் சேடப்பாளையத்தை சேர்ந்த மாணவி மஹாலக்ஷ்மி 600க்கு 598 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேபோன்று திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியை சேர்ந்த தன்யஸ்ரீ 600க்கு 594 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

sasikala

அதேபோன்று, பழனி நெய்க்காரப்பட்டியை சேர்ந்த மாணவி அப்சரா 600க்கு 592 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த கோகிலா என்ற மாணவி, விபத்தில் சுயநினைவை இழந்த தனது தாயை பராமரித்துக் கொண்டே 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதி 600க்கு 573 மதிப்பெண்கள் எடுத்திருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. சென்னையை சேர்ந்த திருநங்கை மாணவி நிவேதா பல தடைகளை தகர்த்து 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்திருப்பது அறிந்து மிகவும் பெருமிதம் அடைகிறேன். அதேபோன்று, மயிலாடுதுறை மாவட்டம் பல்லவராயன்பேட்டை கிராமத்தில் உள்ள நரிக்குறவர் குடியிருப்பைச் சேர்ந்த மாணவர் வீரசிவாஜி 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. 

அதேபோன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்விலும் மாணவச்செல்வங்கள் சிறப்பான சாதனைகளை படைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த மாணவி காவிய ஜனனி 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்திருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. 

sasikala

அதேபோன்று, திண்டுக்கல் மாவட்டம் கொசவப்பட்டியை சேர்ந்த மாணவி காவிய ஸ்ரீயா, கிருஷ்ணகிரி மாவட்டம்  அரூரை சேர்ந்த சந்தியா, திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளம் பகுதியை சேர்ந்த சஞ்சனா அனுஷ் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்த மாணவி தேவதர்ஷினி ஆகியோர் 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

பல தடைகளை கடந்து, விடாமுயற்சியுடன் நன்றாக படித்து 12-ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வெற்றிபெற்று, சாதனை படைத்துள்ள மாணவச்செல்வங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


மேலும், இத்தேர்வுகளில் தற்சமயம் வெற்றி வாய்ப்பை தவற விட்டவர்கள், அதைப்பற்றி கவலைப்படாமல், எதிர்மறை சிந்தனைகளை தவிர்த்துவிட்டு, தன்னம்பிக்கையோடும், தைரியமாகவும் இருந்து மீண்டும் முயற்சித்து தேர்ச்சி பெறவேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மாணவச்செல்வங்கள் தங்களுடைய பெற்றோர்கள், ஆசிரியர்கள், உற்ற நண்பர்களோடு அமர்ந்து பேசுங்கள், அடுத்து என்ன செய்யலாம் என்று பொறுமையோடு ஆராய்ந்து, விரும்பிய மேற்படிப்புகளை தேர்ந்தெடுத்து அதிலும் வெற்றி பெற்று, உங்கள் எண்ணம்போல் வாழ்க்கை அமைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.