ஆவின் பொருட்கள் விலை உயர்வுக்கு சசிகலா கண்டனம்!!

 
sasikala

திமுக அரசு ஆவின் பொருட்களின் விலை ஏற்றத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று சசிகலா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக அரசு ஆவின் பொருட்களுக்கு விலையை வரலாறு காணாத வகையில் உயர்த்தி இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது, ஒவ்வொரு நாளும் திமுக அரசு தாங்கமுடியாத சுமைகளை தமிழக மக்கள் மீது தொடர்ந்து ஏற்றிக் கொண்டே இருக்கிறது, இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. திமுக அரசு கடந்த மார்ச் மாதம் தான் நெய், பால் பவுடர், தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட ஆவின் பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தியிருந்தது, அதாவது, ஆவின் நெய் லிட்டருக்கு 30 ரூபாய் வரையிலும், பால் பவுடர் 1 கிலோ 40 ரூபாய், பாதாம் பால் பவுடர் 1 கிலோ 100 ரூபாய், தயிர் லிட்டருக்கு 6 ரூபாய் என்ற அளவுக்கு கடுமையாக விற்பனை விலை உயர்த்தப்பட்டது.

tn

இந்த நிலையில் தற்போது நெய் லிட்டருக்கு 45 ரூபாய், தயிர் லிட்டருக்கு 10 முதல் 20 ரூபாய் வரையிலும், லஸ்ஸி 200 மி.லி. 2 முதல் 3 ரூபாய் வரையிலும் மீண்டும் உயர்த்தியிருப்பது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.அதாவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் உணவுப் பொருட்களுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதித்து இருப்பதை காரணமாக காட்டி, திமுக அரசு அதை விட அதிகமாக 8.5 சதவிகிதம் அளவுக்கு ஆவினில் நெய்யின் விலையை உயர்த்தியிருப்பது, பகல் கொள்ளையாக தெரிகிறது.திமுக அரசு இது போன்று மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஆவின் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தி வந்தால், ஆவின் நிறுவனத்தை மக்கள் புறக்கணிக்கின்ற நிலை ஏற்பட்டுவிடும். மேலும், இது போன்ற நடவடிக்கைகளால் தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாகவும், அவர்களின் விற்பனையை அதிகரிக்கவும் தமிழக அரசே உதவுவதாக அமைந்துவிடும். இதற்காகவா தமிழக மக்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டார்கள் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுகிறது.

tn

அதேபோன்று மத்திய அரசும் உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். ஏற்கனவே விலைவாசி உயர்வு, கொரோனா போன்ற பிரச்னைகளால் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கின்ற சூழ்நிலையில் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன், தமிழக அரசு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படவில்லை என்றால் மக்களால் புறக்கணிக்கப்படுகின்ற காலம் வெகு தொலைவில் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, திமுக அரசு ஆவின் பொருட்களின் விலை ஏற்றத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.