‘சென்னையில் ஒரு நாள்’ திரைப்பட நாயகனை சந்தித்ததில் மகிழ்ச்சி- சரத்குமார்

 
சரத்குமார்

கடந்த 2013 ஆம் ஆண்டு சகீத் காதர் இயக்கத்தில்  சரத்குமார், பிரகாஷ் ராஜ், சேரன், பிரசன்னா, ராதிகா சரத்குமார், பார்வதி மேனன் மற்றும் இனியா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சென்னையில் ஒருநாள். சென்னையில் நிகழ்ந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியில் நலல் வரவேற்பை பெற்றது. உண்மை சம்பவத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தை நேரில் கண்டதை நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார் நடிகர் சரத்குமார். 

இதுகுறித்து சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், “29.03.2013 - சென்னையில் ஒரு நாள் திரைப்படம் வெளிவரக் காரணமான ஓர் உண்மை சம்பவத்தின்  நாயகன் திரு.மோகன் அவர்களை, நேற்றைய தினம் எனது THOR - ஐ அழைத்துக் கொண்டு நடைபயிற்சி சென்ற போது நேரில் சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். 

20.09.2008 - திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த 15 வயது ஹிதேந்திரன் விபத்துக்குள்ளாகி, துரதிர்ஷ்டவசமாக மூளைச்சாவு அடைந்ததில் அவரின் இதயத்தை, அப்போதைய கூடுதல் கமிஷனர் (டிராபிக்) சுனில்குமார் உதவியுடன் தேனாம்பேட்டை அப்பல்லோவில் இருந்து ஜெ.ஜெ.நகருக்கு  75 நிமிடத்தில் கடக்கக்கூடிய தொலைவை 11 நிமிடங்களில் கடந்து இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவியவர் திரு.மோகன் அவர்கள். 


உடலுறுப்பு தானத்தின் அவசியத்தை அழுத்தமாக, உணர்வுப்பூர்வமாக எடுத்துக்காட்டி, ஹிதேந்திரன், சிறுமி அபிராமி இப்பூவுலகை விட்டு நீங்கினாலும், நினைவில் நிற்பவர்கள் மனிதநேயம், மனதில் துணிவு கொண்டு அச்சமயம் உயிரைக்காத்த அனைவரும் உண்மை நாயகர்கள்.  அந்த வகையில், தற்போது நீலாங்கரை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வரும் திரு.மோகன் அவர்களை சந்தித்து உரையாடியதில் நெகிழ்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.