பேருந்துகளில் மாணவர்கள் படியில் பயணம் செய்வதை தடுக்க நடவடிக்கை தேவை- சரத்குமார்

பேருந்துகளில் மாணவர்கள் படியில் பயணம் செய்வதை தடுப்பதற்கு நடவடிக்கை தேவை என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குன்றத்தூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11 - ஆம் வகுப்பு பயின்று வந்த சந்தோஷ் என்ற மாணவர் மாலை பள்ளி முடிந்ததும் சக மாணவர்களுடன் அரசு பேருந்தில் முன்பக்க படியில் தொங்கியபடி பயணித்ததில், எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து அவரது கால்கள்மீது பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியதால் அறுவை சிகிச்சைக்கு பின் மாணவன் சந்தோஷின் இரண்டு கால்களும் அகற்றப்பட்ட செய்தியறிந்து மிகுந்த வேதனையடைகிறேன்.
இச்சம்பவத்தில் மாணவன் அலட்சியமாக படியில் பயணம் செய்துள்ளாரா? அல்லது அரசுப் பேருந்துகள் பற்றாக்குறையால் மாணவர்கள் திரளாக கூட்டத்தில் நசுங்கி படியில் பயணம் செய்யும் சூழலுக்கு தள்ளப்படுகிறார்களா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். தமிழகத்தில் பெரும்பான்மையான பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டிருப்பதால், அனைவரும் ஏறிய பின் கதவுகள் மூடப்பட்டு பயணிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு பயணம் செய்யும் நிலை தொடர்வதற்கு என்ன காரணம்? அரசுப்பள்ளிகள் இயங்கும் பகுதிகளுக்கு விடப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைவாகவோ, அல்லது அனைத்து பேருந்து நிறுத்தப்பகுதியிலும் பேருந்தினை நிறுத்தாமல் ஓட்டுனர் வேகமாக செல்வதோ காரணமாக இருக்கலாம்.
எதுவாக இருப்பினும், தமிழக போக்குவரத்துத்துறை தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களை அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல், விபத்துகளை தவிர்ப்பதற்கும், மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்வதை தடுப்பதற்கும் துரிதமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மேலும், பாதிக்கப்பட்ட மாணவனுக்கு செயற்கை கால்கள் பொருத்துவதற்கு தேவையான நிதி உதவியும், உயர்தர மருத்துவ சிகிச்சையும் வழங்குவதை தமிழக அரசு உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.