“அஜிதாவிடம் விஜய் அன்றே செய்திருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது”- சரத்குமார்
தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் தூக்க மாத்திரை உட்கொண்ட விவகாரத்தில், அன்றே விஜய் இறங்கி இரண்டு வார்த்தைகள் பேசி இருந்தால் இந்த பிரச்னையே வந்திருக்காது என நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக திரைப்பட நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது, “தென்காசி தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு? தேர்தல் அறிவிக்கப்பட்டு மாநில நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து எத்தனை இடத்தில் பாஜக வேட்பாளர்கள் நிறுத்தப் போகிறோம் என்று தெரிந்த பின்பு முடிவெடுக்கப்படும். மேலும், நான் நிற்பதை விட என்னுடன் பயணித்தவர்கள் நின்றால் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கின்றேன். தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே இருக்கிறது. மதக் கலவரமாக இருந்தால் தடுக்கலாம். போட்டி, பொறாமை போன்ற கொலை வழக்குகள் காவல்துறைக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் போதையினால் பாலியல் வன்கொடுமை நடைபெறுகிறது. போதை கலாச்சாரம் அதிகமாயிற்று என்று நினைக்கின்றேன்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் தற்போது 125 நாட்களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திமுக மத்திய அரசின் எந்த நல்ல திட்டத்தையும் வரவேற்பதில்லை. நல்ல திட்டமாக இருந்தால் அவர்களுடைய பெயரை போட்டுக் கொள்கிறார்கள். அவர்களுக்கு பாதகமாய் இருந்தால் குற்றச்சாட்டு சொல்கின்றார்கள். தேர்தலையே சந்திக்காத விஜய் தற்போது தேர்தலை சந்திக்க உள்ளார். முதலில் போட்டி போட வேண்டும் என்ன நிலைப்பாடு, கொள்கை, கோட்பாடு என்பதை தெரிவிக்காமல் தனி நபர் தாக்குதலை மட்டும் சொல்லிக் கொண்டே இருக்கின்றார்.. அரசியல் கட்சியாக நான் அதை பார்க்கவில்லை. தேர்தலை சந்தித்தப் பின்பு தான் நிலைப்பாடு தெரியும். அதன்பின்பு கட்சி இருக்குமா இல்லையா என்று தெரியும்.

தூத்துக்குடியில் தவெக நிர்வாகி அஜிதா ஆக்னல் விஜய் கார் முன்னாள் நின்றுள்ளார். அவரை ஒரு பெண்ணாக, மனிதாபிமானம் அடிப்படையில் விஜய் காரை விட்டு இறங்கி என்ன குறை என்று கேட்டிருக்கலாம். அதுதான் கதாநாயகன், தலைவனாக இருக்க முடியும். ஆனால் அவர் அதனை அன்று செய்யாமல் இருந்ததால் தர்ணா போராட்டம், மற்றும் தூக்க மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். அன்று அவர் இறங்கி இரண்டு வார்த்தைகள் என்ன என்று கேட்டிருந்தால் இந்த பிரச்னையை இருந்திருக்காது. SIR நியாயமான முறையில் திருத்தம் செய்யப்பட்டிருக்கின்றது. நடிகர் விஜய் இனி நடிக்க மாட்டேன் என்று சொல்வது அவரது ரசிகர்கள் மத்தியில் வருத்தம் அளிக்கும்” என்றார்.


