அரசின் கோரிக்கையை ஏற்று சாம்சங் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் - அமைச்சர் தா.மோ.அன்பரசன்..

அரசின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சாம்சங் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் தாமோ அன்பரசன் கேட்டுக்கொண்டார்.
சாம்சங் ஊழியர்களின் தொடர் போராட்டம் தொடர்பாக ஆணையர் தலைமையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில் உடன்பாடு ஏட்டப்படவில்லை. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பெயரில் அமைச்சர்கள் தாமோ அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா மற்றும் சி.வி.கணேசன் ஆகியோர் தலைமையிலும் தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்னிலையிலும் தலைமைச் செயலகத்தில் முத்தரப்பு பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இதில் 14 அம்ச கோரிக்கைகளுடன் உடன்பாடு ஏற்பட்டு ஒரு தரப்பு தொழிலாளர்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதேநேரம் சிஐடியு தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை எனவும், போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் பேச்சு வார்த்தைக்கு பின் அமைச்சர்கள் தாமோ அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் தா.மோ அன்பரசன், “29 நாட்களாக தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அறிந்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் உடன்பாடு எட்டபடவேண்டுமென எண்ணி 3 அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தையை தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பெயரில் நடத்தப்பட்டது. நிர்வாக தரப்பு சிலவற்றை மறுத்தார்கள் , ஊழியர்களும் கோரிக்கை வைத்தார்கள் .
ஏ.சி பேருந்துகள் அதிகப்படுத்துதல் , இடைக்கால சிறப்பு ஊக்கத் தொகையாக 5000 ரூபாய் அக்டோபர் 2024 முதல் மார்ச் 2025 வரை வழங்குவது நடைமுறையில் இருக்கும், ஊழியர் இறப்பின் ஒரு லட்சம் வழங்குவது உள்ளிட்ட 14 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டார்கள், ஒரு தரப்பினர் வேலைக்கு செல்கிறார்கள்.. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று நாளை(இன்று) முதல் வேலைக்கு திரும்பவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
சி.ஐ.டி.யு எங்கள் சங்கத்தை அங்கிகரிக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால் வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தொழிற்சங்க பிரச்சனை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நிர்வாக தரப்பில் தங்களிடம் அதிகம் பேர் உள்ளனர் எனவும், தொழிலாளர் தரப்பில் தங்களிடம் அதிகம் பேர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் கோரிக்கையை ஏற்று வேலைக்கு திரும்புவார்கள் என நம்புகிறோம். தொழிலாளர்களுக்கு பிரச்சனை என்றால் அரசு பார்த்துக்கொள்வோம். ” என்றார்.