திருச்செந்தூர் கடற்கரையில் பாதுகாப்பாக குளிக்க அனுமதி
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று மதியம் 12.15 மணிக்கு மணிக்கு வெளியிட்டுள்ள எச்சரிக்கையின் படி 15.12.2024 பௌர்ணமி நாளில் 55 கிலோமீட்டர் வரை பலத்த காற்றும் 0.9 மீ/வினாடி முதல் 1.1 மீ/வினாடி வரை கடல் நீரோட்டமும் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் குளிக்கவும் இரவு முழுவதும் கடற்கரையில் தங்கவும் யாருக்கும் அனுமதி இல்லை இந்த அறிவுறுத்தலை அனைவரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் திருச்செந்தூர் கோவில் முன்புள்ள கடற்கரையில் கடல் சீற்றம் குறைவாக உள்ள காரணத்தால் பந்தல் கடலில் பாதுகாப்பாக குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி வருகின்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் ஒலிபெருக்கி மூலமாக பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். திருச்செந்தூருக்கு பக்தர்கள் இன்று வர வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதால் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கடற்கரை பகுதியில் போலீசார் மற்றும் கடற்கரை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.