ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு- நகைக்கடை ஓனரிடம் இருந்து கைமாறியது அம்பலம்

ரயிலில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்த வழக்கு, சௌகார்பேட்டை நகைக்கடை உரிமையாளரிடம் இருந்து 4 கோடி பணம் கைமாறி இருப்பது சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்துள்ளது. விரைவில் நகைக்கடை உரிமையாளருக்கு சம்மன் வழங்க உள்ளதாக சிபிசிஐடி போலீசார் கூறியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி இரவு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் ரூபாய் 4 கோடி பறிமுதல் செய்த வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சுமார் 15-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தை பெற்றுள்ளனர். குறிப்பாக இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நவீன்,சதீஷ், பெருமாள் ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ரூபாய் 4 கோடி பணம் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது எனவும் பணப்பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது என்றும் வாக்குமூலம் அளித்தனர்.
இவர்களின் வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து இவ்வழக்கில் முக்கியமான நபராக பார்க்கக்கூடிய நெல்லை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அளித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 4 கோடி ரூபாய் பணமானது சௌகார்பேட்டையில் உள்ள நகைக்கடை உரிமையாளர் ஒருவரிடம் இருந்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக நகைக்கடை உரிமையாளரின் உதவியாளர் ஒருவர் தான் பணத்தை கொண்டு வந்திருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்திருப்பதால், ஜூவல்லரி உரிமையாளருக்கு ஓரிரு தினங்களில் சம்மன் அளிக்க உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை அழைத்து விசாரணை நடத்திய பின் தான் யார் உத்தரவின் பேரில் பணம் கொடுக்கப்பட்டது? யாருக்கு சொந்தமான பணம் என்ற உண்மையான விவரங்கள் தெரியவரும் என போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.