பொங்கல் தொகுப்புடன் ரூ.2,000- ஐகோர்ட் மறுப்பு

பொங்கல் தொகுப்புடன் 2000 ரூபாய் ரொக்கம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், இதுசம்பந்தமாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என மறுத்துவிட்டது.
நடந்து முடிந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியது. இந்த பரிசு தொகுப்புடன் 2000 ரூபாய் ரொக்க பணம் வழங்கக் கோரி பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் மோகன்தாஸ், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் லட்சுமிநாராயணன் அமர்வில் வழக்கறிஞர் மோகன்தாஸ் முறையிட்டார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஏழை மக்களுக்கு ரொக்க பணம் வழங்கினால் மகிழ்ச்சி தான். ஆனால், இது முழுக்க முழுக்க அரசின் கொள்கை முடிவு என்றும், ரொக்கம் வழங்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது எனவும் கூறி, வழக்கை விசாரணைக்கு எடுக்க மறுத்து விட்டனர்.