விடிய விடிய சோதனை! விரட்டி விரட்டி விசாரணை! லஞ்ச ஒழிப்பு போலீசாரால் தாசில்தாரருக்கு நெஞ்சுவலி

 
காதர்

பெட்ரோல் பங்கிற்கு தடையில்லா சான்று பெறுவதற்கு ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக  ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வட்டாட்சியர் காதர்செரீப்பை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

Etv Bharat

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே  தேக்கம்பட்டி பகுதியில் புதிதாக துவங்கப்பட உள்ள  பெட்ரோல் பங்கிற்கு தடையில்லா சான்று பெறுவதற்கு மதுரையை சேர்ந்த சுப்பிரமணி என்பவரிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக சுப்பிரமணி தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு புகார் கொடுத்தார் . இந்நிலையில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்புத்துறை தேனி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் தலைமையிலான  பத்துபேர்கள்  கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் பணத்தை சுப்பிரமணியிடம் கொடுத்து ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த வட்டாட்சியர் காதர்செரீப்பிடம் கொடுக்க சொல்லி இருந்த நிலையில் அதைப் பெற்றுக் கொண்ட வட்டாட்சியரை அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

மருத்துவமனை அழைத்துச்செல்லப்பட்ட தாசில்தார்

அதனை தொடர்ந்து ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் காதர்செரிப்பிடம் தேனி லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் தொடர்  விசாரணையில் ஈடுபட்டபோது வட்டாட்சியருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து வட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்கொண்ட  9 மணி நேர சோதனை தற்போது முடிவடைந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வட்டாட்சியர் காதர்செரிப்புக்கு  சிகிச்சை முடிந்த பின்பு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது