பட்டப்பகலில் பயங்கரம்... வெடிகுண்டு வீசி ரவுடி வெட்டிக் கொலை- காஞ்சிபுரத்தில் பரபரப்பு

காஞ்சிபுரம் அடுத்த திருக்காளி மேடு பகுதியில் பிரபல ரவுடி வசூல்ராஜா வெடி குண்டு வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காஞ்சிபுரம் திருகாளிமேடு பகுதியை சேர்ந்தவர் ரவுடி வசூல்ராஜா. இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. காவல் துறையின் அறிவுரையின் பெயரில் தற்போது எந்த குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் டிராவல்ஸ் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று திருக்காலிமேடு சிவன் கோயில் எதிரே உள்ள ரேஷன் கடை வாசலில் வசூல்ராஜா பகல் 1மணியளவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பார்க்காத நேரத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் திடீரென ராஜா மீது நாட்டு வெடிகுண்டு வீசிய போது அது மார்பு பகுதியில் பட்டத்தின் விளைவாக அப்பகுதி முழுவதும் சிதைந்து அதே இடத்தில் நிலை குலைந்து உயிரிழந்தார்.
வெடி சத்தம் கேட்டதும் அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் வெளியே வந்து பார்க்கும்போது அவரது உடல் சிதைந்த நிலையில் இருந்ததும் உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்துக்கு காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர் விரைந்து வந்து புலன் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சம்பவம் இடத்திற்கு தற்போது இரண்டு ஏடிஎஸ்பி தலைமையிலான குழுவினர் அங்குள்ள சிசிடிவி காட்சிகள், மோப்பநாய் உதவியுடன் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரிடம் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் விரைந்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டார். மேலும் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தப்பி ஓடிய கொலையாட்களை பிடிக்க தனிப்படைகள் அமைத்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார். பட்டப்பகலில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது அப்பகுதியில் மிகுந்த அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.