திருப்பதியில் தரிசன டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே அறைகள் ஒதுக்கீடு

திருமலையில் தரிசன டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே அறைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருமலையில் விஐபிக்களுக்கு அறைகள் ஒதுக்குவதற்கான புதிய கொள்கையை தேவஸ்தானம் அமல்படுத்தியுள்ளது. தரிசன டிக்கெட்டுகள் உள்ள விஐபி பக்தர்களுக்கு மட்டுமே தங்குமிடம் வழங்கப்படுகிறது. திருமலை முழுவதும் மொத்தம் 7,500 அறைகள் உள்ளது. இதில் 3,500 அறைகள் சி.ஆர். இ. அலுவலகத்தில் இருந்து நேரடியாக வரும் பக்தர்களுக்கு ஆதார் அடிப்படையில் அனைத்து பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றன. 1,580 அறைகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டு முன்பதிவு செய்வதற்கும், 400 அறைகள் நன்கொடையாளர்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. 450 அறைகள் வருகைப் பதிவுக்கு உட்பட்டவையாக வழங்கப்படுகின்றன. மீதமுள்ள அறைகள் நேரடியாக வரும் விஐபிகளுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றை பத்மாவதி விசாரனை மையம், எம்பிசி மற்றும் டி.பி.சி. கவுண்டரிலிருந்து பெற வேண்டும்.
இந்த கவுண்டர்களில் தரிசன டிக்கெட்டுடன் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில், ஆதாரைப் பயன்படுத்தி புரோக்கர்கள் விஐபி அறைகள் அதிக அளவில் வாங்கப்பட்டு, அவர்களின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவற்றை 48 மணி நேரம் வரை பயன்படுத்தலாம் என்பதால், அவை இரண்டு அல்லது மூன்று பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. தற்போது தரிசன டிக்கெட்டுகள் உள்ளவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகிறது. எனவே தரிசனத்திற்குப் பிறகு பக்தர்கள் உடனடியாக அறைகளை காலி செய்வதால் மற்றொரு அரை மணி நேரத்திற்குள் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. இதனால் தேவஸ்தானத்திற்கு வருமானமும் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.