#BIG NEWS : ட்ரெக்கிங் சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்: மலைப்பகுதியில் கிடந்த ராக்கெட் லாஞ்சர் வெடித்து கல்லூரி மாணவர் பலி!
செங்கல்பட்டில் உள்ள கல்லூரி மாணவர்கள் 6 பேர், நேற்று மாலை 5:30 மணி அளவில் அனுமந்தபுரம் மலைப்பகுதிக்கு ட்ரெக்கிங் சென்றுள்ளனர். மாணவர்கள் மலையேற்றத்தை முடித்துவிட்டு கீழே இறங்கி வந்தபோது, அங்கு வெடிக்காத நிலையில் கிடந்த ராக்கெட் லாஞ்சர் ஒன்று எதிர்பாராத விதமாகப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இந்த விபத்தில், பெங்களூருவைச் சேர்ந்த எம்.எம்.சி. யாதவ் (21) என்ற மாணவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் சென்ற மேலும் மூன்று மாணவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து நடந்ததிற்கான காரணம் :
விபத்து நடந்த பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக ராணுவத்தின் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருவதும்,ராணுவத்தினர் பயிற்சியின் போது ராக்கெட் லாஞ்சர்களைப் பயன்படுத்தி மலையை நோக்கிச் சுடுவது வழக்கம். அவ்வாறு ஏவப்படும் குண்டுகளில் சில நேரங்களில் வெடிக்காமல் போகும் குண்டுகள் அங்கேயே விடப்படுகின்றன.அப்படி ஒரு குண்டு தான் ஒரு கல்லூரி இளைஞரின் உயிரை பறித்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாம்பரம் துணை ஆணையர் மற்றும் கூடுவாஞ்சேரி உதவி ஆணையர் தலைமையிலான போலீசார், வெடிப்பு நேரிட்ட விதம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



