தவெக வேட்பாளருக்கு உதவ ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் விரைவில் நியமனம்
சட்டமன்றத் தேர்தலில் தவெக வேட்பாளருக்கு உதவ ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் நியமிக்க வேண்டும்,தொகுதிக்கு குறைந்தபட்சம் இரண்டு பேர் நியமிக்க தவெக தலைமை உத்தரவிட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய் யாரை வேட்பாளராக அறிவிக்கிறாரோ அவர்களுக்கு தேர்தல் பணிகளில் உதவ ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை தன்னார்வலராக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் நியமிக்க வேண்டும் என்று தமிழக வெற்றி கழக தலைமை மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஓய்வு பெற்ற வட்டாட்சியர்கள்,ஓய்வு பெற்ற நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி, மற்றும் மாநகராட்சி ஆணையர்கள், ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர்கள், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் இவர்களை யாராவது குறைந்த பட்சம் இரண்டு நபர்களை ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் கட்சி சார்பில் தேர்தல் பணிகள் மேற்கொள்ள நியமிக்க வேண்டும் என்று மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தவெக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுவை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள் என்ற நிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற மாவட்ட செயலாளர் கூட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

