இனி காஞ்சியில் பட்டு சேலை வாங்குவது அவ்வளவு எளிதல்ல… புதிய விதிகள் அமல்!
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் பணிகள் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்டரங்கில் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர்,”காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர் ஸ்ரீபெரும்புதூர் பணி உத்திரமேரூர் காஞ்சிபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
மொத்தம் 13 லட்சத்து 15 ஆயிரத்து 329 வாக்காளர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளனர். மாவட்டத்தில் வாக்குப்பதிவு அலுவலர்களாக சுமார் 8984 நபர்களும், இதர தேர்தல் பணிகளில் சுமார் 2100 நபர்களும் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தேர்தல் பணிகளை கண்காணிக்க 21 தொடர்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் நடைமுறைகளைக் கண்காணிக்க பறக்கும் படை குழு, நிலையான கண்காணிப்புக்குழு உள்ளிட்ட 8 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்தல் விதிகள் அமலில் இருப்பதால் பட்டு நகரமான காஞ்சிபுரத்திற்கு பட்டு சேலை வாங்க வருபவர்கள், தாங்கள் கொண்டு வரும் பணத்திற்கு உரிய ஆவணங்களையும், மொத்தமாகச் சேலை வாங்குவோர், கல்யாண பத்திரிக்கை உள்ளிட்ட இதர ஆவணங்களையும் கொண்டு வர வேண்டும்” என தெரிவித்தார்.