"மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

 
stalin

வேண்டும் வேண்டும்! ஒற்றுமை இந்தியா வேண்டும்! என்று முதல்வரும் , திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "என் மதத்தின் மீது சூளுரைத்தே சொல்கிறேன். என் மதத்திற்காக நான் உயிர் துறக்கவும் தயார். ஆனால் அது என்னுடைய சொந்த விவகாரம். அதில் அரசுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை.” என்று நிமிர்ந்து சொன்னவர் மகாத்மா காந்தியடிகள். தன்னை இந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டவர். அதே நேரத்தில் தன்னைப் போலவே அனைத்து மதத்தவர் உணர்வுக்கும் மரியாதை கொடுத்தவர் அவர். அனைத்து மதங்களும் ஒரே நோக்கம் கொண்டவை என்றவர் அவர். ஒற்றை மதவாத தேசியவாதத்தை அவர் ஏற்கவில்லை. அதனாலேயே மதவெறிக்கு அவர் பலியானார். 75 ஆண்டுகள் ஆனபிறகும் அண்ணல் காந்தியார் மீதான கோபம், வகுப்புவாதிகளுக்கு குறையவில்லை. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் காந்தியாரை வலதுசாரி சக்திகள் இழிவுபடுத்துவது தொடர்கதை!
'காந்தியால் இந்த நாட்டுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை' என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்லி இருப்பதும் இதே வன்மம் கலந்த நோக்கத்துடன்தான்.

stalin
தேசத்தந்தை என்று போற்றப்படும் காந்தியடிகளை, பொய்களாலும் அவதூறுகளாலும் கொச்சைப்படுத்தும் காலமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவரது கொள்கைகள் மட்டுமல்ல, அவரே இழிவுபடுத்தப்படுகிறார். இது நிகழ்காலம் எவ்வளவு வகுப்புவாதச் சகதியில் சிக்கி இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாகும். இதனை உடனே தடுத்தாக வேண்டும்.
மதநல்லிணக்கத்தின் அடையாளமான அண்ணல் காந்தியடிகள் அவர்கள் மதவெறியர்களால் கொல்லப்பட்ட ஜனவரி 30-ஆம் நாளை, நாடு முழுவதும் மதநல்லிணக்க நாளாகக் கடைப்பிடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். மதச்சார்பற்ற ஜனநாயகச் சக்திகள் இதில் கவனம் செலுத்தியாக வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு இந்தக் கடமை அதிகம் இருக்கிறது. எனவே, ஜனவரி 30-ஆம் நாளன்று மதநல்லிணக்க உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியா முழுமைக்குமான ஒற்றுமையின் அடையாளமாக இருக்கின்ற அண்ணல் காந்தியின் புகழைச் சிதைப்பதன் மூலமாக இந்திய நாட்டின் பன்முகத் தன்மையை சிதைக்க முயற்சிக்கிறார்கள். அண்ணல் காந்தி அடிகளின் பிறந்தநாளை 'சுவச்ச பாரத் அபியான்' என மாற்றியதில் இருக்கிறது இவர்களது அழித்தல் வேலைகள். இது காந்தியின் அனைத்து அடையாளங்களையும் அழித்தல் ஆகும். அதே போன்ற காரியத்தைத்தான் அக்டோபர் 2-ஆம் நாள் ஊர்வலம் நடத்துவதன் மூலமாக ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பு திசைதிருப்பப் பார்த்தது. அதனைத் தமிழ்நாடு அரசு அனுமதிக்கவில்லை.எத்தகைய திரைமறைவு வேலைகள் பார்த்தாலும், மக்களின் மனதில் குடியிருக்கிறார் அண்ணல் காந்தி.
நாடு சந்தித்து வரும் மதவெறி பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராகவும், நாட்டு மக்கள் அனைவரும் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்பதையும் வலியுறுத்தும் வகையிலும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை ஜனவரி 30 அன்று மாவட்டக் கழகங்கள் நடத்திட வேண்டும். இதில் அனைத்து மதங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்திய நாட்டின் பண்பாட்டையும், 'எல்லோர்க்கும் எல்லாம்' என்ற தமிழ்நாட்டின் மாண்பையும் இந்திய ஒன்றியத்திற்கு வெளிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக திட்டமிட்டு நடத்திட வேண்டும்.

stalin
மதவெறியை மாய்ப்போம், மனித நேயம் காப்போம்! வாழ்க அண்ணல் காந்தியின் புகழ்!
இந்நிகழ்வில் கீழ்க்கண்ட உறுதிமொழியை அனைவரும் எடுத்திட வேண்டும்.
''அன்பை வாழ்க்கை அறநெறியாக் கொண்டும் -
மனித நேயத்தை நடைமுறை வழியாகக் கொண்டும் வாழ்வேன்!
அனைத்து உயிரும் ஒன்றென்று நினைத்து
அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்வேன்!
மதவெறியை விலக்கி
மதநல்லிணக்கம் பேணுவேன்!
மக்கள் ஒற்றுமையே
மானுடத்தின் வளமும் நலமும் என்பதை மனதில் வைத்தே
எந்நாளும் உழைப்பேன்!
மக்களைப் பிளவுபடுத்தும் ஜாதி,மத எண்ணங்களை விலக்கி
அனைத்து மக்களையும் ஒன்றென நினைத்து
அரவணைத்துச் செல்வேன்!
வேற்றுமையில் ஒற்றுமை காணும்
இந்தியச் சமூகத்தில்
வேற்றுமையை விதைக்கும்
அனைத்து நச்சுக் கருத்துகளையும்
அணுவளவும் ஏற்க மாட்டேன்!
அனைத்துயிரும் ஒன்றென நினைத்து
மனித நேயத்தையே நடைமுறை
வழிமுறையாகக் கொண்டு வாழ்வேன்!
அனைவரிடமும் நல்லிணக்கம் பேணுவேன்!
மானுடம் போற்றுவேன்!"
இந்நிகழ்வில் அந்தந்த மாவட்டப் பொறுப்பு அமைச்சர்கள் கலந்து கொள்ள வேண்டும். கழகச் சிறுபான்மையினர் அணியினர் மாவட்டக் கழகச் செயலாளர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டும்.
மனிதநேயம், மதநல்லிணக்கம், பொது அமைதி ஆகியற்றுக்காக நடத்தப்படும் நிகழ்வு என்பதால் அனைத்து பொதுமக்களும் இதில் பங்கெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்வில், மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் கீழ்க்காணும் முழங்கங்களை எழுப்பிடுவீர்!
காப்போம் காப்போம்!
மனித நேயம் காப்போம்!
விலக்குவோம் விலக்குவோம்!
மதவெறியை விலக்குவோம்!
காப்போம் காப்போம்!
வேற்றுமையில் ஒற்றுமை காப்போம்!
விலக்குவோம்! விலக்குவோம்!
நமக்குள் உள்ள பிளவுகளை விலக்குவோம்!
வேரறுப்போம் வேரறுப்போம்!
மதவெறி சக்திகளை வேரறுப்போம்!
வேரறுப்போம் !வேரறுப்போம்!
பிளவுபடுத்தும் சக்திகளை வேரறுப்போம்!
பிறப்பொக்கும் என்பதே, நமது அறமாகும்.
யாவரும் கேளிர் என்பதே, நமது பண்பாகும்.
வேண்டும் வேண்டும்;
அமைதியான இந்தியா வேண்டும்!
வேண்டாம் வேண்டாம்
வகுப்புவாத இந்தியா வேண்டாம்.
அமைப்போம் அமைப்போம்!
சமூகநீதிச் சமுதாயம் அமைப்போம்!
உருவாக்குவோம் உருவாக்குவோம்!
சமூக ஒற்றுமை உருவாக்குவோம்!
வேண்டும் வேண்டும்;
மதநல்லிணக்கம் வேண்டும்!
வேண்டாம் வேண்டாம்;
மக்களுக்குள் மதப்பிளவுகள் வேண்டாம்.
உருவாக்குவோம் உருவாக்குவோம்;
அனைவர்க்குமான இந்தியாவை உருவாக்குவோம்!
வேண்டும் வேண்டும்!
ஒற்றுமை இந்தியா வேண்டும்! என்று குறிப்பிட்டுள்ளார்.