ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தம்!

ராமேஸ்வரம் மீனவர்கள் இரண்டாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 22ம் தேதி மீன்பிடிப்பதற்கான மீனவர்கள் கடலுக்கு சென்ற நிலையில், கச்சத்தீவு எல்லைப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை ஐந்து விசைப்படகையும், அதிலிருந்து 32 மீனவர்களையும் கைது செய்து மார்ச் 7ம் தேதி வரை வவுனியா சிறையில் அடைத்துள்ளது. இதனை அடுத்து ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கையை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டம் இன்று இரண்டாவது நாளாக தொடர்கிறது. போராட்டத்தின் காரணமாக 700-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் படகுகளை கரையோரம் நங்கூரம் போட்டு நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் நாள் ஒன்றுக்கு அரசுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதோடு 10,000க்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலை சார்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகின்றது. மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவத்திற்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி கொடுக்கும் வகையில் மத்திய, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்