சொன்னதை செய்வார் ரஜினிகாந்த்..! இது எப்போ நடக்கிறதோ அப்போ நிச்சயமாக ரஜினி ₹1 கோடி தருவார் - லதா ரஜினிகாந்த்..!

 
Latha Rajinikanth

‘மக்கள் மேடை’ அமைப்பு சார்பில் பாரத சேவா இணையதள தொடக்க விழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள மலையாளி கிளப்பில் இன்று நடைபெற்றது.

ஶ்ரீ தயா அறக்கட்டளையின் தலைவர் லதா ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநிலம் முழுவதும் முன்னெடுக்கப்பட உள்ள சமூக நலத்திட்டங்கள் குறித்து அறிவிக்கப்பட்டது. மேலும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் பயன்பெறும் வகையில் ‘மக்கள் மேடை’ இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது.

நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய லதா ரஜினிகாந்த், இந்த மக்கள் சேவை 45 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. ஒவ்வொரு செங்கல்லாக அமைப்பை கட்டியுள்ளோம். இந்தியாவுக்கு ஒரு புதிய கல்வி முறையை தொடங்கியுள்ளோம். தொடர்ந்து சமூக நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம். விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும் என்றார்.

பல ஆண்டுகளாக தாங்கள் மேற்கொண்டு வரும் பணிகளை அதிகளவிலான மக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கிலேயே ‘மக்கள் மேடை’ இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டுப்பற்று எல்லாவற்றையும் விட பெரியது என்று கூறிய அவர், ரஜினிகாந்தின் ஆதரவைவிட அவரது ஆசீர்வாதம் தான் எங்களுக்கு முக்கியம் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து, காவிரி இணைப்புத் திட்டம் தொடர்பாக ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002 இல் கூறியது குறித்து லதா ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு,"இது ஒரு அரசியல் கேள்வி.காவிரி இணைப்புத் திட்டம் எந்த நிமிடம், எந்த வேளையில் நடக்கிறதோ, அப்போது ரஜினிகாந்த் கண்டிப்பாக தான் சொன்னதை செய்வார்" என்று பதிலளித்தார்.

‘மக்கள் மேடை’ இணையதளம் சமூக நிகழ்வுகளை ஒருங்கிணைப்பதற்கான தளமாக மட்டுமா அல்லது பொதுமக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் தளமாகவும் செயல்படுமா என்ற கேள்விக்கு, "இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை. மக்கள் பிரச்சினைதான் அரசாங்க பிரச்சினை. அரசாங்கத்திடம் கொண்டு சேர்க்க வேண்டிய நிலைமை வந்தால், அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்" என்று லதா ரஜினிகாந்த் பதிலளித்தார்.