“2026 மே 5 ஆம் தேதி இது நடப்பது உறுதி”- அடித்து சொல்லிய ராஜேந்திர பாலாஜி

 
rajendra balaji rajendra balaji

எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் முதல்வராக வருவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.

Image


சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல் பாலாஜி நகரிலுள்ள விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக தலைமை அலுவலகத்தில் 2026 சட்டமன்றத்தேர்தல் களப்பணிகள் குறித்த அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தகவல் தொழில்நுட்ப ப் பிரிவு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கிப் பேசிய போது, “சமூக வலைதளங்களில் திமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கு நீங்களும் தக்க பதிலடி கொடுக்க வேண்டும், அந்த பதிலடி என்பது அசிங்கமாக இருக்கக் கூடாது. மரியாதையான வார்த்தைகளால் பதிலடி கொடுங்கள். அதிமுக ஐடி விங் நிர்வாகிகளை விட திமுக ஐடி விங் நிர்வாகிகள் சிறந்த நிர்வாகிகள் கிடையாது. திமுக ,காங்கிரஸ் ஐடி விங் நிர்வாகிகள் கூலிக்கு வேலை செய்பவர்களாகத்தான் இருக்கிறார்கள்.உண்மைக்கும், லட்சியத்திற்கும், இயக்கத்திற்கும் மதிப்பளிக்கக் கூடிய உண்மையான தளபதிகள் அதிமுக ஐடி விங் நிர்வாகிகள். அடுத்து அமையப்போகின்ற ஆட்சி அதிமுக ஆட்சிதான்.எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழகத்தின் முதல்வராக உறுதியாக வரப்போகிறார். அதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது. அதிமுக- பாஜக கூட்டணி ஒரு அற்புதமான வளமான, பலமான கூட்டணி. இந்தக் கூட்டணி தான் வெல்லும் கூட்டணி.

தவறு மேல் தவறு செய்யும் திமுகவை இன்றைக்கு மக்கள் தட்டிக் கேட்க மாட்டார்கள். 2026- சட்டமன்றத் தேர்தலில் திமுகவை தட்டிக் கேட்டு வீட்டுக்கு அனுப்பும் பணியை தமிழக மக்கள் செய்வார்கள்.தோல்வி என்ற பரிசை திமுகவிற்குத் தரப்போகிறார்கள்.வெற்றி என்ற மணிமகுடத்தை எடப்பாடியாருக்குத் தரப்போகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி 2026- மே 5 -ம் தேதி கோட்டை கொத்தளத்தில் முதல்வராக பதவி ஏற்கப் போகிறார். சிறப்பாக பணியாற்றும் ஐடி விங் நிர்வாகிகளுக்கு அதிமுக ஆட்சி அமைந்தவுடன் உரிய மரியாதை கிடைக்கும். பிரபாகரன் பிறந்தநாள் அன்று ஐடி விங் கூட்டத்தை நாம் நடத்தி உள்ளோம் . செய் அல்லது செத்து மடி என்று போராடினான் ஈழத்து சிங்கம் பிரபாகரன். வங்கத்து சிங்கம் நேதாஜி போன்று வரவேண்டும் என்ற எண்ண உணர்வோடு ஐடி விங் நிர்வாகிகள் பணியாற்றுங்கள். என்னுடைய இளமைக் காலத்தில் பிடல்காஸ்ட்ரோ, சேகுவாரா ,நேதாஜியின் வரலாற்றை படிப்பேன்.மாவீரன் பிரபாகரன் வரலாற்றை படிப்பேன். எடப்பாடி பழனிச்சாமியின் உழைப்புக்குத் தான் அதிமுக கொடுத்த பரிசு பொதுச்செயலாளர் என்ற பதவி. எடப்பாடியாரின் பொறுமைக்கும், அவருடைய வீரத்திற்கும், அவருடைய செயல்பாட்டிற்கும் மக்கள் கொடுத்த அங்கீகாரம் தான் முதலமைச்சர் என்ற பதவி. களத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கும் துணிச்சல் திமுகவிற்கு கிடையாது” என்றார்.