பொன்னாடை அணிவிக்கவந்த நிர்வாகியை ஓங்கி அறைந்த ராஜேந்திர பாலாஜி!

அதிமுக பொதுக்கூட்டத்தில் நிர்வாகியின் கன்னத்தில் அறைந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்திற்கு அவைத் தலைவர் விஜயகுமரன் தலைமை தாங்கினார். இதில் அ.இ.அ.தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே டி ராஜேந்திர பாலாஜி மற்றும் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .
இக்கூட்டத்தின் துவக்கத்தில் கே.டி. ராஜேந்திர பாலாஜிக்கு பொன்னாடை அணிவித்து வெள்ளிவாள் வழங்கப்பட்டது. மேலும் பலரும் பொன்னாடை அணிவிக்க வந்தனர். அப்போது வரிசையில் முந்திக் கொண்டு விருதுநகர் பாண்டியன் நகரைச் சேர்ந்த கிழக்கு ஒன்றிய எம்ஜிஅர் மன்ற துணைச் செயலாளர் நந்தகுமார் பொன்னாடை அணிவிக்க வந்தார். வரிசையில் வராமல் முந்திக் கொண்டு வந்தார். அவரை கே.டி. ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்தார். மேலும் என்ன? எதற்கு வந்த? என்று அவரை கே.டி. ராஜேந்திர பாலாஜி அதட்டினார்.
இதனால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.