பரிசோதனை செய்வதற்குள் ஒமிக்ரான் மறைந்துவிடுகிறது - அமைச்சர் ராஜகண்ணப்பன்

 
raja kannappan

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில், சிறப்பு  பேருந்து இயக்கம் குறித்து போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் ஆய்வு செய்தார். 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ராஜகண்ணப்பன், “பயணிகள் எந்த பிரச்சனையும் இன்றி பயணிக்க, டிக்கெட் கிடைக்கவில்லை என வருந்தாத அளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  கடந்த 11 ம் தேதி முதல் 12,865 பேருந்துகளில் 5.74 லட்சத்துக்கு மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் பயணம் செய்துள்ளனர். பயணியர் கூட்டம் அதிகரித்தால் பேருந்து எண்ணிக்கை அதிகரிக்கப்படும். பேருந்துகளில் பயணிக்க 89 ஆயிரம் பேர் வரை முன்பதிவு செய்தனர்.  தீபாவளியை விட பேருந்து நிலையங்களில்  அதிகம் கூட்டம் காணப்படுகிறது. 75 சதவீதம் இருக்கைகளில் மட்டும் பயணிகள் அனுமதிக்கப்படுவதால், ஒரு சில பேருந்துகளில் மட்டுமே பயணிகள் நின்று பயணிக்கும் நிலை இருக்கிறது. 

ஒமிக்ரான் தொற்று பரிசோதனை மேற்கொள்வதற்குள், காணாமல் போய் விடுகிறது. குளிர் காலத்தில் கொரோனா அதிகமாகத்தான் இருக்கும். பேருந்து வழித்தட உணவகங்களில் தரமற்ற நிலையிலும், விலை அதிகமாகவும் உணவு வழங்கப்படுவதாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். போதுமான அளவு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதால், அதிகமானோர் ஆம்னியில் பயணிக்கவில்லை. ஆம்னி பேருந்துகளில் கட்டணம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஞாயிறு முழு ஊரடங்கு நாளில் பேருந்து இயக்கப்படாது. பொங்கல் முடிந்து திரும்புவோருக்கு 17 ஆயிரம் பேருந்துகள் வரை இயக்கப்படும். ஞாயிறு முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும்,  சனிக்கிழமை இரவு முறையாக பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் ஞாயிற்றுக்கிழமை காலை வந்து சேரலாம்” எனக் கூறினார்.